நடிகர் விஜய் தேவரகொண்டா மீது போலீசில் புகார்.. என்ன காரணம் தெரியுமா ?

vd

பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்துள்ள திரைப்படம் 'ரெட்ரோ'. இந்த திரைப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சி சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்தது. இதில் சூர்யாவுடன் பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா கலந்துகொண்டார். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நடிகர் விஜய் தேவரகொண்டா, பஹல்காம் தாக்குதல் குறித்து தனது கருத்துகளை முன்வைத்தார். அதில், “தீவிரவாத தாக்குதலில் ஈடுபடுபவர்களுக்கான கல்வியை உறுதி செய்வதும், அவர்கள் மூளை சலவை செய்யப்படுவதை தவிர்ப்பதும் தான் காஷ்மீரில் நடக்கும் பிரச்சினைக்கு தீர்வாக அமையும். அவர்கள் எதை சாதிக்க போகிறார்கள்?.
vd12

காஷ்மீர் இந்தியாவுடையது. அங்கு வாழும் மக்களும் நம்மவர்கள் தான். 2 ஆண்டுகளுக்கு முன் ‘குஷி’ படத்தின் படப்பிடிப்புக்காக நான் காஷ்மீர் சென்றிருந்தேன். அந்த மக்கள் எனக்கு நல்ல நினைவுகளையே பரிசாக அளித்தனர். பாகிஸ்தானால் அவர்கள் நாட்டின் சொந்த மக்களையே கவனித்துக்கொள்ள முடியவில்லை. அவர்களுக்கு முறையான மின்சார வசதியோ, தண்ணீர் வசதியோ இல்லை. அப்படியிருக்கும்போது அவர்கள் இங்கு வந்து என்ன செய்ய போகிறார்கள்? இந்தியா பாகிஸ்தானை தாக்க வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் அவர்கள் நாட்டு மக்களே அந்த அரசாங்கத்தின் மீது அதிருப்தியில் இருக்கிறார்கள். இதே நிலை தொடர்ந்து அரசுக்கு எதிராக மக்களே கிளர்ந்தெழுவார்கள். 500 ஆண்டுகளுக்கு முன்பு பழங்குடியினர் எப்படி சண்டையிட்டார்களோ அப்படியான செயல்களில் அவர்கள் ஈடுபடுகின்றனர். நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து ஒருவரை ஒருவர் நேசிக்க வேண்டும். ஒற்றுமையுடன் மக்களாக ஒன்றிணைய வேண்டும். கல்வியே சிறந்த ஆயுதம். மகிழ்ச்சியாக இருந்து, நம் பெற்றோர்களையும் மகிழ்வுடன் வாழச் செய்யும்போது தான் நாம் முன்னேற முடியும்” என்று பேசியிருந்தார்.
 
இந்நிலையில் இதில் பழங்குடிகள் குறித்து விஜய் தேவரகொண்டா பேசியதற்கு எதிராக ஹைதராபாத் எஸ்.ஆர் நகர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கிஷன் லால் சவுகான் என்ற வழக்கறிஞர் எஸ்.ஆர். நகர் காவல் நிலையத்தில் விஜய் தேவரகொண்டா மீது புகார் அளித்தார். புகார் மனுவில், விஜய் தேவரகொண்டாவின் கருத்துக்கள் பழங்குடி சமூகத்தை புண்படுத்தும் வகையிலும், இழிவுபடுத்துவதாகவும் இருப்பதாகக் குற்றம் சாட்டிய அந்த வழக்கறிஞர், இதற்காக விஜய் தேவரகொண்டா மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். புகாரை பெற்றுக்கொண்டுள்ள போலீஸார், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

Share this story