சர்ச்சை கருத்து விவகாரம்... மன்னிப்பு கேட்ட இயக்குனர் அனுராக் காஷ்யப்...!

phule

‘புலே’ திரைப்படத்திற்கு ஆதரவாக சர்ச்சை கருத்து தெரிவித்திருந்த விவகாரத்தில் இயக்குனர் அனுராக் காஷ்யப் மன்னிப்பு கோரியுள்ளார். 


பிரபல இந்தி நடிகரும் இயக்குநருமான அனுராக் காஷ்யப், தமிழில் ‘இமைக்கா நொடிகள்’, ‘மகாராஜா’, ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். மகாராஷ்டிராவை சேர்ந்த சமூக சீர்திருத்தவாதிகளான ஜோதிபா மற்றும் சாவித்ரிபாய் புலே ஆகியோரின் வாழ்க்கைக் கதையை மையப்படுத்தி ‘புலே’ என்ற படம் உருவாகி உள்ளது. ஏப்.11-ம் தேதி வெளியாக இருந்த இந்தப் படத்துக்கு மகாராஷ்டிராவை சேர்ந்த பிராமண சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அது தொடர்பான காட்சிகளில் சில திருத்தங்களை மேற்கொள்ள, மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் கேட்டுக் கொண்டது.anurag


திருத்தத்துக்குப் பின்னர், வரும் 25-ம் தேதி படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் இயக்குநரும் நடிகருமான அனுராக் காஷ்யப், சமூக வலைதளத்தில் தணிக்கை வாரியத்தைக் கண்டித்திருந்தார். அதில், ‘‘சுதந்திரத்துக்கு முன்போ அல்லது அதற்குப் பின்னரோ இந்தியர்கள் சாதி அடிப்படையிலான பாகுபாட்டை எதிர்கொள்ள வில்லையா?’’ என்று கேட்டிருந்தார் ‘‘இந்தியாவில் சாதிகளே இல்லை என்றால் புலே தம்பதியினர் எதற்காகப் போராடினார்கள்?” என்று கேட்டிருந்தார். இதையடுத்து பிராமண சமூகத்தினர், அவருக்கு எதிரான கருத்துகளைத் தெரிவித்திருந்தனர். இதற்குப் பதில் அளித்த அனுராக் காஷ்யப், சர்ச்சையான கருத்தைத் தெரிவித்திருந்தார். இதனால் பிராமண சமூகத்தினரை புண்படுத்தியதாக கூறி அனுராக் காஷ்யப் மீது அஷுதோஷ் துபே என்ற வழக்கறிஞர் போலீஸில் புகார் அளித்தார். இந்நிலையில் அனுராக் காஷ்யப் தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும், தனது மகள் மற்றும் குடும்பத்தினருக்குக் கொலை, பாலியல் வன்கொடுமை மிரட்டல்கள் வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Share this story