“ஆன்லைன் விமர்சனங்களை பார்க்கக் கூடாது என்று முடிவு” : இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ்

“ஆன்லைன் விமர்சனங்களை பார்க்கக் கூடாது என்று முடிவு செய்துள்ளேன் என்று இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்துள்ளார்.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘ரெட்ரோ’ படம் மே 1-ம் தேதி வெளியானது. கலவையான விமர்சனங்களை பெற்றாலும் இப்படத்துக்கு வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படத்தை 2டி நிறுவனம் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளன.
இந்நிலையில், அண்மையில் பேட்டில் ஒன்றில் கார்த்திக் சுப்பராஜ் கூறும்போது, “ஆன்லைன் விமர்சனங்களை பார்க்கக் கூடாது என்பதை ‘ரெட்ரோ’ படத்தின் மூலம் உணர்ந்து கொண்டேன். காரணம், அதில் நிறைய அஜெண்டாக்கள் உள்ளே கொண்டு வரப்படுகிறது. நான் எல்லா ஆன்லைன் விமர்சனங்களையும் சொல்லவில்லை. சில விமர்சனங்களை பார்க்கும்போது அது நேர்மையாக இருக்கிறதா இல்லையா என்று தெரியும்.ஒரு படம் என்று வரும்போது 150 முதல் 200 பேர் வரை பணிபுரிகிறோம். அவர்கள் அனைவருக்கும் அந்தப் படம் வெளியாவது என்பது ஒரு கனவு. படம் அனைவருக்கும் பிடிக்கும்போது அது ஒருவித மகிழ்ச்சியை தருகிறது. ஆனால் அவர்களை மகிழ்ச்சியாகவே இருக்கவிடக்கூடாது என்பது போல சில விமர்சனங்கள் இருக்கின்றன.
நாம் ஜெயித்தோமா இல்லையா என்பதை மற்றவர்கள் சொல்லக் கூடாது; நாம் தான் சொல்லவேண்டும். படத்துக்கு ஆடியன்ஸ் எப்படி ரியாக்ட் செய்கிறார்கள் என்பதுதான் முக்கியம். அதைத்தான் இந்த படத்திலிருந்து நான் முடிவு செய்துள்ள விஷயம்” என்று கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்துள்ளார்.