தனுஷ் இயக்கப்போகும் நான்காவது படத்தில் நடிப்பது இவர்களா?

கோலிவுட்டின் சிறந்த நடிகர்களில் ஒருவரான தனுஷ் கடைசியாக கேப்டன் மில்லர் படத்தில் நடித்தார். அருண் மாதேஸ்வரன் இயக்கியிருந்த அந்தப் படம் பெரும் எதிர்பார்ப்போடு வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்நிலையில், அவரது அடுத்த படமான ராயன் திரைப்படத்தை அவரே இயக்கி நடித்துள்ளார். தனுஷின் 50வது படமான ராயனுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
ராயன் படத்தை இயக்கி முடித்திருக்கும் அவர், அந்தப் படத்தின் பணிகளுக்கிடையே நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தையும் இயக்கி முடித்திருக்கிறார். அதில் அனிகா, தனுஷின் உறவினர் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இந்தப் படமும் தனுஷின் முத்திரையை பதிக்கும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறார்கள்.சூழல் இப்படி இருக்க ராயன் படம் பற்றி சமீபத்தில் எஸ்.ஜே.சூர்யா பேசியபோது, 'தனுஷ் இன்னொரு கதையையும் வைத்திருக்கிறார். நான்காவது படமாக அதை இயக்கவிருக்கிறார்' என்று கூறி சர்ப்ரைஸ் கொடுத்திருந்தார். இந்நிலையில் ராயன் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடந்தது. இதில் பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள். அப்போது பேசிய பிரகாஷ் ராஜ், தனுஷ் அவரது நான்காவது படத்தை இயக்கவிருக்கிறார். அந்தக் கதையை என்னிடமும் சொல்லிவிட்டார். நானும், நித்யா மேனனும் நடிக்கிறோம் என்று கூறியிருக்கிறார்.
இதனால் தனுஷ் இன்னொரு படம் இயக்குவது உறுதியாகியிருக்கிறது. தனுஷ் - பிரகாஷ் ராஜ் - நித்யா மேனன் கூட்டணி ஏற்கனவே திருச்சிற்றம்பலம் படத்தில் இணைந்து பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.