‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படத்துக்கு வந்த சிக்கல்?... நடிகர் சந்தானம் மீது பாஜக புகார்..

நடிகர் சந்தானத்தின் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படத்துக்கு சிக்கல் எழுந்துள்ளது.
இயக்குநர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘டிடி ரிட்டர்ன்ஸ்’. ஹாரர் - காமெடி படமாக இந்தப் படத்தில் சுரபி, ரெடின் கிங்ஸ்லி, ‘லொள்ளு சபா’ மாறன், மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்தனர். இந்தப் படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்தப் படத்தின் அடுத்த பாகம் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ (DD Next level) என்ற பெயரில் உருவாகியுள்ளது. இந்தப் படத்தை பிரேம் ஆனந்த் இயக்கியுள்ளார். சந்தானத்துடன் இணைந்து கௌதம் வாசுதேவ் மேனன், செல்வராகவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு ஆஃப்ரோ இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தின் முதல் சிங்கிளான ‘Kissa 47’ அண்மையில் வெளியானது. திரைப்படங்களை விமர்சிக்கும் நபராக வரும் கதாபாத்திரத்தில் நடித்துள்ள சந்தானத்திற்காக நகைச்சுவை கலந்த வார்த்தைகளை பாடல் தயாராகியுள்ளது. கௌதமி என்பவர் எழுதியிருந்தார். பாடல் 9 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது.
இந்நிலையில் இந்தப் பாடலில் பெருமாள் பாடலான 'கோவிந்தா கோவிந்தா' பாடலின் வரிகளும் இடம்பெற்றிருந்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் பெருமாளை அவமதிக்கும் விதமாக பாடல் இடம் பெற்றுள்ளதாகவும் இதனை திரைப்படத்தில் தடை செய்ய வேண்டும், நடிகர் சந்தானத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாஜக வழக்கறிஞர்கள் சார்பில் சேலம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் மனு வழங்கப்பட்டது. இதனால் சந்தானம் படத்திற்கு சிக்கல் உருவாகியுள்ளது. டிடி நெக்ஸ்ட் லெவல் படம் வெளியாக இன்னும் 4 நாட்கள் உள்ள நிலையில் சந்தானம் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது