திரு.மாணிக்கம் படத்தை பாராட்டிய இயக்குனர் அமீர்
இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் திரு மாணிக்கம். இந்த படத்தில் சமுத்திரக்கனி, அனன்யா, பாரதிராஜா, நாசர், தம்பிராமையா, ஸ்ரீமன், வடிவுக்கரசி, கருணாகரன், இளவரசு மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். திரைப்படம் கடந்த 27 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
சீதா ராமம் படத்தின் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். சினேகன், சொற்கோ மற்றும் இளங்கோ கிருஷ்ணன் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர். மைனா சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்தை ஜிபி ரவிக்குமார், சிந்தா கோபாலகிருஷ்ண ரெட்டி, ராஜா செந்தில் இணைந்து தயாரித்துள்ளனர். இந்நிலையில் திரைப்படத்தை பார்த்த இயக்குனர் மற்றும் நடிகரான அமீர் படக்குழுவை பாராட்டி எழுதியுள்ளார். அதில் அவர் தூதர் முகமது நபிகள் அவர்கள் கூறீனார்கள்: ஒரு காலம் வரும். அப்போது சத்தியத்தை பேசுகிறவர்கள் உள்ளங்கையில் நெருப்புத் துண்டை வைத்திருப்பதற்கு சமம் என்று. அதேப் போல் இன்றைய காலத்தில் எளிய மனிதர்கள் வறுமையிலும் நேர்மையாக வாழ்வது என்பது அரிதிலும் அரிதானதாகவே மாறி வருகிறது. உண்மையிலும் எல்லா மனிதர்களும் நேர்மையும் உண்மையுமாக அறத்தோடு வாழ வேண்டியது அவசியமாகிறது என்பதை உணர்த்தும் படம் தான் திரு மாணிக்கம்."