‘சங்கமித்ரா’ அப்டேட் கொடுத்த இயக்குனர் சுந்தர்.சி...

sundar c

‘சங்கமித்ரா’ படப் பணிகள் எப்போது தொடங்கும் வாய்ப்பு இருக்கிறது என்பதற்கு இயக்குநர் சுந்தர்.சி பதிலளித்துள்ளார்.

‘கேங்கர்ஸ்’ படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அதில் ‘சங்கமித்ரா’ படம் குறித்து சுந்தர்.சியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சுந்தர்.சி, “அநேகமாக அடுத்த ஆண்டு தொடங்கும் என நினைக்கிறேன். இப்போது அப்படத்தை எப்போது தொடங்கலாம் என்ற முடிவு என்னிடம்தான் இருக்கிறது. அந்தளவுக்கு நல்ல நம்பிக்கை இருக்கிறது.

sundar c
முன்பு அனைத்துமே சரியாக அமைய வேண்டும் என்ற சூழல் இருந்தது. இப்போது நான் ஒப்புக்கொண்ட படங்களை முடித்துவிட்டு தொடங்க வேண்டும் அவ்வளவு தான். ‘சங்கமித்ரா’ படத்தை தொடங்கிவிட்டால், 2 அல்லது 3 வருடங்களுக்கு அதை மட்டும் தான் பண்ண வேண்டும்” என்று தெரிவித்துள்ளார் சுந்தர்.சி.


2017-ம் ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் அறிவிக்கப்பட்ட படம் ‘சங்கமித்ரா’. தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க ஆர்யா, ஜெயம் ரவி, ஸ்ருதிஹாசன் நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதில் சாபு சிரில், ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோரையும் ஒப்பந்தம் செய்து பணிகளும் தொடங்கப்பட்டது. பின்பு தயாரிப்பு நிறுவனத்துக்கு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் இப்படம் தொடங்கப்படாமல் இருக்கிறது. தற்போது அதே நடிகர்கள், தயாரிப்பாளருடன் ‘சங்கமித்ரா’ தொடங்க இருக்கிறதா என்பது விரைவில் தெரியவரும்.

Share this story