‘விடாமுயற்சி’ படக்குழுவை பாராட்டிய இயக்குனர் விக்னேஷ் சிவன்..!

இயக்குனர் விக்னேஷ் சிவன் விடாமுயற்சி படக்குழுவை பாராட்டி பதிவிட்டுள்ளார்.
அஜித் நடிப்பில் உருவாகி இருந்த விடாமுயற்சி திரைப்படம் நேற்று (பிப்ரவரி 6) திரைக்கு கொண்டுவரப்பட்டது. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் இந்த படம் வெளியானது. மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி இருந்த இந்த படத்தில் அஜித், திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா மற்றும் பலர் நடித்திருந்தனர். லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பிலும் அனிருத்தின் இசையிலும் உருவாகி இருந்த இந்த படத்திற்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்து இருந்தார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இருப்பினும் அஜித் ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடி தீர்த்து வருகின்றனர். இந்நிலையில் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதள பக்கத்தில் விடாமுயற்சி படம் குறித்து தனது கருத்தினை பதிவிட்டுள்ளார்.
அதில், “விடாமுயற்சி படம் ஒரு தரமான திரில்லர் படம். முதல் காட்சியிலிருந்து கடைசி காட்சி வரை ஒரு புதிர் போல கவர்ந்திழிக்கிறது. அஜித் சார் ஒட்டுமொத்த படத்தையும் தனது தோளில் தாங்குகிறார். ரிஸ்க்கான ஆக்ஷன் காட்சிகள் முதல் எமோஷனலான கடைசி காட்சி வரை அவர் அருமையாக படித்திருக்கிறார். அவர் நடக்கும் ஒவ்வொரு காட்சிகளிலும் விசில் அடிக்க தவறவில்லை. அனிருத் தனது இசையால் ஸ்கோர் செய்துள்ளார். மகிழ் திருமேனி திரைக்கதையை உருவாக்கிய விதம் அருமை. ஓம் பிரகாஷ், நிரவ் ஷாவின் ஒளிப்பதிவு நன்றாக இருக்கிறது. உண்மையிலேயே சர்வதேச தரம், திரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் ஆகியோரின் நடிப்பு பிரமாதம். பிரம்மாண்ட வெற்றிக்கு லைக்கா நிறுவனத்திற்கு என்னுடைய வாழ்த்துக்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.