போதைப்பொருள் விவகாரம் : நடிகர் ஷைன் டாம் சாக்கோவிற்கு நோட்டீஸ்

shyam

போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக நடிகர் ஷைன் டாம் சாக்கோவிற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 
 
கேரளாவில் போதைப் பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் கொச்சியில் உள்ள ஒட்டலில் போதைப்பொருள் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை தேடி போலீசார் இரவில் அதிரடியாக சென்று சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது ஒருவர் ஒட்டலின் 3-வது மாடியில் இருந்து தப்பித்து ஓடியதாக கூறப்பட்டது. அவர் யார்? என விசாரணை நடத்திய போது பிரபல நடிகர் ஷைன் டாம் சாக்கோ என தெரியவந்தது. இதனை சி.சி.டி.வி. காட்சிகள் மூலம் போலீசார் உறுதிப்படுத்தினர். அஜித் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி உள்பட பல படங்களில் ஷைன் டாம் சாக்கோ நடித்துள்ளார். இவர் ஏன் போலீசாரை கண்டு தப்பி ஓடினார்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக அவருக்கு நோட்டீசு அனுப்பி விசாரணைக்கு அழைக்கவும் கொச்சி போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

shine
இது தொடர்பாக போலீஸ் அதிகாரி கூறுகையில், ஒட்டலில் இருந்து வெளியேறியது ஏன்? என்பது குறித்து நடிகர்ஷைன் டாம் சாக்கோவிடம் விசாரிக்க உள்ளோம். விசாரணையின் ஒரு பகுதியாக ஒட்டல் ஊழியர்களிடமும் வாக்கு மூலங்கள் பெறப்படும் என்றார். சர்ச்சையில் சிக்கி உள்ள நடிகர் ஷைன் டாம் சாக்கோ கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலையானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story