இயக்குனரான பிரபல எழுத்தாளர்... முக்கிய பிரச்சினை பேசும் புதிய கதைக்களம் !

பிரபல எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இயக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல எழுத்தாளராக இருப்பவர் பாஸ்கர் சக்தி. 'எம்டன் மகன்', 'வெண்ணிலா கபடிக்குழு', 'நான் மகான் அல்ல', 'பாண்டியநாடு' உள்ளிட்ட பல படங்களில் வசனகர்த்தாவாக பணியாற்றியுள்ளார். அவர் எழுதிய வசனங்கள் மிகவும் பிரபலமானவை. 'அழகர்சாமி குதிரை' படத்தில் கதாசிரியராக பணியாற்றியுள்ளார்.
வசனகர்த்தா, கதாசிரியராக பணியாற்றி வந்த அவர் தற்போது புதிய படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். தமிழகத்தில் முக்கிய பிரச்சினையாக உருவாகி வரும் வட மாநில தொழிலாளர்களை பற்றி இப்படம் உருவாகி வருகிறது. 'வடக்கன்' என்ற தலைப்பில் உருவாகும் இப்படத்தில் அறிமுக நடிகர்கள் குங்குமராஜ் மற்றும் வைரமாலா ஆகிய இருவரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்த படத்திற்கு ஜனனி இசையமைக்க, தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. இந்த படப்பிடிப்பை இயக்குனர் சுசீந்திரன் இன்று தொடங்கி வைத்தார். இந்த படம் குறித்து பேசிய இயக்குனர் பாஸ்கர் சக்தி, எழுத்தாளராக எனது பணியை தொடங்கினேன். அதன்பிறகு தொலைக்காட்சி தொடர்களில் வசனகர்த்தாவாக பணியாற்றினேன். தற்போது ‘வடக்கன்’ படத்தின் இயக்குனராக திரைப்பயணத்தை தொடர்கிறேன் என்று கூறினார்.