‘இட்லி கடை’ படப்பிடிப்பு செட்டில் தீ விபத்து..!

idly kadai

நடிகர் தனுஷ் இயக்கி நடித்து வரும் இட்லி கடை படத்திற்காக போடப்பட்டிருந்த செட் தீக்கிரையாகியுள்ளது.

நடிகர் தனுஷ் இயக்கத்தில் வெளியான ’பவர் பாண்டி’, ’ராயன்' போன்ற படங்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. அடுத்து இவரது இயக்கத்தில் ’நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படம் அண்மையில் வெளியானது. இதனை தொடர்ந்து தனுஷ் இயக்கத்தில் 4 வது படமாக 'இட்லி கடை' என்கிற திரைப்படம் உருவாகியுள்ளது. இது தனுஷின் 52-வது திரைப்படமாகும். தனுஷ் இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. எம்மாதிரியான கதைக்களத்துடன் இப்படம் இருக்கும் என மக்களிடம் எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது. அருண் விஜய் இப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.idly kadai


இதனிடையே இத்திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.ஆனால் திரைப்படத்தின் சில காட்சிகள் இன்னும் எடுக்கப்படாதலால் திரைப்படம் அந்த தேதியில் வெளியாகாது என படக்குழு சமீபத்தில் தெரிவித்தது. திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் இட்லி கடை படப்பிடிப்புக்காக மிகப்பெரிய அளவில் அமைக்கப்பட்டிருந்த செட்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவியதால் செட் முழுவதும் காலியானது.



மேலும் காற்று வீசியதால் தீ செட் முழுவதும் பரவியது. இதையடுத்து தீயணைப்புத்துறையினர் போராடி தீயை அணைத்தனர். முன்னதாக தேனி மாவட்டம் அனுப்பப்பட்டியை தொடர்ந்து ஆண்டிபட்டியிலும் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. அடுத்த கட்ட படப்பிடிப்பு வேறு பகுதிக்கு மாற்றப்பட்ட நிலையில் பிரிக்காமல் இருந்த ஆண்டிபட்டி செட்டில்தான் தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தீ விபத்தின் போது தனுஷ் உள்ளிட்ட படக்குழுவினர் யாரும் இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளதால் அவரது ரசிகர்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.

Share this story