ஜி.வி.பிரகாஷ் - பாடகி சைந்தவி விவாகரத்து வழக்கில் புதிய உத்தரவு...!

பரஸ்பரம் விவாகரத்து கோரிய வழக்கில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் - பாடகி சைந்தவி இருவரும் செப்டம்பர் 25 தேதி நேரில் ஆஜராக சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வளம் வருபவர் ஜி.வி. பிரகாஷ். இவர், கடந்த 2013 ஆம் ஆண்டு தனது பள்ளித் தோழியும், சினிமா பின்னணிப் பாடகியுமான சைந்தவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.ஜி.வி.பிரகாஷ் - சைந்தவிக்கு தம்பதிக்கு மகள் ஒருவரும் உள்ளார். கடந்த 12 வருட திருமண உறவில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இருவருக்கிடையே இருந்த பிரச்சனையால் சமீப காலமாக இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். பின்னர், இருவரும் பிரிவதாக அறிவித்து சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் பரஸ்பரம் விவாகரத்து கோரி கடந்த மாதம் 24 தேதி நேரில் ஆஜராகி மனு தாக்கல் செய்திருந்தனர்.
இன்று இந்த வழக்கை கோப்புக்கு எடுத்த சென்னை முதலாவது கூடுதல் குடும்ப நல நீதிமன்ற நீதிபதி செல்வ சுந்தரி, பரஸ்பரம் இருவரும் விவாகரத்து கோரிய மனுவை செப்டம்பர் 25 தேதிக்கு தள்ளி வைத்தார். அன்றைய தினம் விசாரணைக்கு இருவரும் நேரில் ஆஜராகவும் நீதிபதி உத்தரவிட்டார். இருவரும் அன்று நேரில் ஆஜராகி தங்களுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும் பட்சத்தில் அன்றைய தினம் இந்த விவாகரத்து வழக்கில் உத்தரவு பிறப்பிக்க வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.