ஹீரோவான 3 காமெடியன்களின் படம் ஒரே நாளில் ரிலீஸ்...!

தமிழின் முன்னணி நகைச்சுவை நடிகர்களாக இருந்து ஹீரோவான 3 பேரின் படங்கள் ஒரே நாளில் திரைக்கு வருகிறது.
சினிமாவில் நாயகனாக அறிமுகமாகி இறுதிவரை நாயகனாகவே நடித்தவர்களும் உள்ளனர். வில்லனாக நடிப்பைத் துவங்கி
நாயகனாவதும் வழக்கமானதுதான். ஆனால், ஒரு நகைச்சுவை நடிகரை கதாநாயகனாகப் பார்ப்பது எல்லாவிதத்திலும் பெரிய எதிர்பார்ப்பை அளிப்பது.
அந்த வகையில், 2010-க்குப் பின் தமிழ் சினிமாவின் முக்கியமான நகைச்சுவை நடிகரான சந்தானம் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகி கடந்த 10 ஆண்டுகளாக நாயகனாக மட்டுமே நடித்து வருகிறார். அதேபோல், சந்தானம் கதாநாயகன் ஆனதால் நகைச்சுவை நடிகருக்கானத் தேவை ஏற்பட நடிகர்கள் சூரி மற்றும் யோகி பாபு ஆகியோர் அந்த இடங்களைப் பிடித்தனர். தற்போது, சூரியும் தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனாக உருவெடுத்துள்ளார்.
இந்த நிலையில், நகைச்சுவை நடிகர்களாகத் தங்கள் திரைப்பயணத்தைத் தொடங்கிய சந்தானம், சூரி, யோகி பாபு ஆகியோர் கதாநாயகர்களாக நடித்த டிடி நெக்ஸ்ட் லெவல், மாமன், ஜோரா கையத் தட்டுங்க ஆகிய படங்கள் வருகிற மே 16 ஆம் தேதி ஒரேநாளில் திரைக்கு வருகின்றன.
தமிழின் முன்னணி நகைச்சுவை நடிகர்கள் கதை நாயகர்களாக நடித்த படங்கள் ஒரே நாளில் திரைக்கு வருவது இதுவே முதல்முறை என்பதால் ரசிகர்களிடம் ஆச்சரியம் ஏற்பட்டுள்ளது.