‘ரசிகர்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கையை மெய்ப்பிக்க கடமைப்பட்டுள்ளேன்’ - அஜித் நெகிழ்ச்சி

ajith

நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை மெய்ப்பிக்க ஒவ்வொரு நொடியும் நான் கடமைப்பட்டுள்ளேன் என்று அஜித் தெரிவித்துள்ளார். துபாயில் நடந்த 24 ஹெச் கார் ரேஸில், 991 பிரிவில் நடிகர் அஜித்தின் ‘அஜித்குமார் ரேஸிங்' அணி 3-வது இடம் பிடித்து வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து அவருக்கு அரசியல் பிரமுகர்கள், திரையுலகினர், ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அஜித் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “துபாய் கார் பந்தய ரேஸின் போதும் நிகழ்வுக்கு பின்னரும் இப்போதும் எப்போதும் நீங்கள் எனக்கு கொடுத்து வரும் ஆதரவும் ஊக்கமும் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. எல்லாம் வல்ல இறைவன், எனது குடும்பத்தினர், திரைத்துறையினர், ஊடகங்கள், அரசியல் தலைவர்கள், விளையாட்டுப் பிரமுகர்கள், நலம் விரும்பிகள் மற்றும் எனது அன்புக்குரிய ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல எனக்கு வார்த்தைகள் போதவில்லை.

இந்த அசைக்க முடியாத அன்பும் ஊக்கமும் தான் எனது ஆர்வத்திற்கும் விடாமுயற்சிக்கும் உந்து சக்தியாக உள்ளது. என் முன் இருக்கும் சவால்களை உடைத்து மோட்டார் ஸ்போர்ட்டில் புதிய சாதனைகள் படைக்கவும் தூண்டுதலாக உள்ளது. இந்த பயணம் என்னைப் பற்றியது மட்டுமல்ல! உங்களை பற்றியது தான். நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை மெய்ப்பிக்க ஒவ்வொரு நொடியும் நான் கடமைப்பட்டுள்ளேன். அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் மற்றும் சங்கராந்தி நல்வாழ்த்துகள்” என்று அஜித் தெரிவித்துள்ளார்.

Share this story