நடிகர் விஜய் பின்வாங்கிவிடுவார் என சந்தேகம் உள்ளது... : நடிகர் பார்த்திபன்

நடிகர் விஜய் அரசியலில் இருந்து பின்வாங்கிவிடுவார் என சந்தேகம் உள்ளது என நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ளார். 2026 இல் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதாக அவர் அறிவித்துள்ளார். இந்நிலையில், விஜயின் அரசியல் செயல்பாடு குறித்து சாத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் பார்த்திபனிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், "நண்பர் விஜய்க்கு அரசியல் அவசியமே இல்லை. தமிழ் சினிமாத்துறையில் அவர் ஒரு ராஜாங்கம் நடத்தி வருகிறார். அவர் தான் அடுத்த சூப்பர் ஸ்டார். கலெக்சன் மன்னன் அவர் தான். ரூ.200 கோடி சம்பளம். இப்படி ஒரு சிம்மாசனத்தை விட்டு விட்டு அவர் எதற்கு மக்கள் பிரச்சனைகளை பேச வேண்டும்.
அவர் எதோ நல்லது செய்யவேண்டும் என்று ஆசைப்படுகிறார். மாற்றம் ஒன்று தான் மாறாதது. யார் வேண்டுமானாலும் ஆட்சிக்கு வரலாம். ஏற்கனவே சில நடிகர்கள் அரசியலுக்கு வந்து பின்வாங்கியதில் விஜயும் பின்வாங்கி விடுவாரோ என்ற சந்தேகம் உள்ளது. இருந்தாலும் அந்த சந்தேகத்தை ஊதி பெரிதாக்கி நல்லது செய்ய வருபவரை நாம் ஏன் பயமுறுத்த வேண்டும். அதனால் விஜய் முனைப்புடன் அரசியலில் செயல்படட்டும்" என்று தெரிவித்தார்.