“வடிவேலு மீது எனக்கு வருத்தம்...” - ‘கேங்கர்ஸ்’ பட விழாவில் சுந்தர்.சி பேச்சு...!

sundar c

வடிவேலு மீது எனக்கு ஒரே ஒரு வருத்தம் இருந்தது என 'கேங்கர்ஸ்’ பட விழாவில் இயக்குனர் சுந்தர்.சி கூறியுள்ளார்.  

15 ஆண்டுகளுக்குப் பிறகு சுந்தர்.சி - வடிவேலு இணைந்து நடித்துள்ள ‘கேங்கர்ஸ்’ வரும் 24ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இப்படத்தில் கேத்ரின் தெரசா, வாணி போஜன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில், இப்படத்தின் முன்னோட்ட விழா சென்னை வேலப்பன்சாவடியில் நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் சுந்தர்.சி,   “நானும், வடிவேலும், இணைந்து கிட்டத்தட்ட 20 வருடங்களாகப் பணியாற்றி வருகிறோம். 2003-ல் வடிவேலுடன் எனது பயணத்தைத் தொடங்கினேன்.ஒரு நடிகர் இப்படி நடிக்க முடியுமா? என்று இன்னும் அவரைப் பார்த்து வியந்துக்கொண்டிருக்கிறேன். படத்தில் ஒரு சாதாரணக் காட்சியாக இருந்தால் கூட அதற்கு அவர் கொடுக்கும் எக்ஸ்பிரஷன் அற்புதமாக இருக்கும்.

நடிப்பில் லெஜண்ட் என்று சொன்னால் அது வடிவேல் சார்தான். ஒரு காட்சிக்கு நான் 10 சதவிகிதம் யோசித்தால் போதும் மீதி 90 சதவிகிதம் அவரே நடிப்பில் படத்தை சிறப்பாக்கி விடுவார். அதனால் எல்லா நடிகர்களுக்கும் இவர் மாஸ்டர் க்ளாஸ் என்று சொல்லலாம். ஒரு மனிதன் இத்தனை வருடங்களாக சிரிக்க வைப்பது என்பது சாதாரண விஷயம் கிடையாது. வடிவேலு மீது எனக்கு ஒரே ஒரு வருத்தம் இருந்தது. அது அவர் இடையில் கொஞ்சம் நடிக்காமல் இருந்ததுதான். அந்த கேப்பில் அவர் நடித்திருந்தால் எத்தனை படங்களை நாம் ரசித்திருந்திருப்போம். இனிமேல் அவரைப் பார்த்து சிங்கம் களத்தில் இறங்கிவிட்டது என எல்லோரும் சொல்ல வேண்டும்” என்றார். தொடர்ந்து பேசிய நடிகர் வடிவேலு, தங்கள் இருவரையும் யாரோ பிரிந்துவிட்டதாக நகைச்சுவையாகக் கூறினார். நிறைவாக பாடலுக்கு நடனமாடி நடிகைகள் கேத்ரின் தெரசா, வாணி போஜன் கவனம் ஈர்த்தனர்.

Share this story