இயக்குநர்கள் மணிரத்னம், வசந்திற்கு பாதம் தொட்டு நன்றி கூறுகிறேன்.. நடிகர் சிவக்குமார்

இயக்குநர்கள் மணிரத்னம், வசந்திற்கு பாதம் தொட்டு நன்றி கூறுகிறேன் என நடிகர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
நடிகர் சூர்யா அவரது 44- வது திரைப்படமாக ரெட்ரோ திரைப்படத்தில் நடித்துள்ளார். இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. இந்தப் படத்திறசந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ரெட்ரோ படம் வருகிற மே 1-ம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடைப்பெற்று வருகிறது. படத்தின் டிரெய்லர் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் சிவக்குமார் " சூர்யா நடிப்பு துறையில்தான் வருவார் என ஜோதிடர் கூறினார். நான் நம்பவே இல்லை. சூர்யாவும் ஒரு தடவை முயற்சி செய்து பார்க்கலாம் என எண்ணினார். மணி ரத்னம் தயாரித்து வசந்த் இயக்கிய நேருக்கு நேர் திரைப்படத்தின் லுக் டெஸ்டிற்கு சென்றார். பிறகு திரைப்படம் வெளியாகி வெற்றி திரைப்படமாக அமைந்தது. மணி ரத்னம் மற்றும் வசந்திற்கு பாதம் தொட்டு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் சூர்யாவை வைத்து இயக்கிய அனைத்து இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்." என கூறினார். இந்நிலையில் சூர்யா ரெட்ரோ திரைப்படத்தில் லவ் டீடாக்ஸ் என்ற பாடலை பாடியுள்ளார். இப்பாடலுக்கு சூர்யா மற்றும் ஷ்ரேயா இணைந்து நடனமாடி இருப்பது குறிப்பிடத்தக்கது.