'இட்லி கடை' ரிலீஸ் தள்ளிப்போவதை உறுதி செய்த தயாரிப்பாளர்...!

தனுஷ் இயக்கி வரும் 'இட்லி கடை' ரிலீஸ் தள்ளிப்போவதாக தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
நடிகர் தனுஷ் இயக்கத்தில் வெளியான 'பவர் பாண்டி', 'ராயன்" போன்ற படங்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. அடுத்து இவரது இயக்கத்தில் 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்` படம் அண்மையில் வெளியானது. இதனை தொடர்ந்து தனுஷ் இயக்கத்தில் 4 வது படமாக 'இட்லி கடை' என்கிற திரைப்படம் உருவாகியுள்ளது. தனுஷ் இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இத்திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், 'இட்லி கடை` ஏப்ரல் 10-ந்தேதி வெளியாகவதில் இருந்து தள்ளிப்போவதாக தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், இன்னும் 20சதவீத படப்பிடிப்பு மீதமுள்ளது. நித்யா மேனன், அருண் விஜய், சத்யராஜ், ராஜ்கிரண், பார்த்திபன் போன்ற நடிகர்கள் ஒரே காட்சியில் நடிக்க வேண்டி உள்ளதால், அவர்களின் நேரத்தை ஒருங்கிணைப்பது சிரமமாக இருந்தது. படம் நன்றாக வந்திருப்பதால், அவசரப்படாமல் சிறப்பாக முடிக்க விரும்புகிறோம். இதனால் படம் வெளியாவதில் தாமதம் ஏற்படுகிறது. புதிய வெளியீட்டுக் தேதியை 10 நாட்களுக்குள் அறிவிப்போம் என்று கூறியுள்ளார்.