ஏ.ஆர்.ரஹ்மானுக்கு விதிக்கப்பட்ட அபராதத்துக்கு இடைக்கால தடை..

arrahman

பொன்னியின் செல்வன் திரைப்பட பாடலின் காப்புரிமை தொடர்பான வழக்கில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு விதிக்கப்பட்ட அபராதம் செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
 
2023ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான திரைப்படம் பொன்னியின் செல்வன்-2. தமிழ் சினிமாவின் மிகப்பெரிய படமாக இது அமைந்தது. இந்தப் படத்தில் வீர ராஜ வீர பாடல் இடம்பெற்றது. இந்த பாடல் தனது தந்தை மற்றும் உறவினர் இசையமைத்த சிவா ஸ்துதி பாடலின் காப்பி என ஃபயாஸ் வசிஃபுதின் டாகர் என்பவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சிவா ஸ்துதி பாடலால் ஈர்க்கப்பட்டு அதன் உந்துதலால் வீர ராஜ வீர பாடலை உருவாக்கியதாக ஏ.ஆர்.ரகுமான் தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்தது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த ஒரு நீதிபதி அமர்வு, இது வெறும் ஈர்ப்பு போல மட்டுமில்லை என்றும், சிவா ஸ்துதி பாடல் சிறிய மாற்றங்களுடன் பயன்படுத்தப்பட்டது போல உள்ளதாகவும் தெரிவித்தது. எனவே டெல்லி உயர்நீதிமன்ற பதிவாளர் அலுவலகத்தில் 2 கோடி ரூபாய் செலுத்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்துக்கு உத்தரவிட்டது.    

rahman
இந்நிலையில் இந்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. 2 கோடி ரூபாய் செலுத்த கோரிய ஒரு நீதிபதி அமர்வு விதித்த தீர்ப்பை இடைக்காலமாக நிறுத்தி வைப்பதாக டெல்லி உயர்நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவிட்டுள்ளது. அபராதத்தை ரத்து செய்யக் கோரி ஏ.ஆர்.ரகுமான் மேல்முறையீடு செய்த வழக்கை விசாரித்த நீதிபதி ஹரிசங்கர் தலைமையிலான அமர்வு இந்த இடைக்கால தடையை விதித்தது. மேலும், வழக்கை மே 23ம் தேதிக்கு ஒத்திவைப்பதாகவும் விரிவான விசாரணை அப்போது நடைபெறும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். 

Share this story