பாலியல் புகாரில் கைதான ஜானி மாஸ்டருக்கு நிபந்தனை ஜாமீன்!

பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பிரபல நடன இயக்குநர் ஜானி மாஸ்டருக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி தெலங்கானா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடன இயக்குநரான ஷேக் ஜானி பாஷா (எ) ஜானி மாஸ்டர் தமிழில் நடிகர் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ படத்தில் ‘காவாலா’ உட்பட பல்வேறு பாடல்களுக்கு நடனம் அமைத்துள்ளார். அவரது குழுவில் பணியாற்றும் 21 வயது பெண் நடன கலைஞருக்கு ஜானி பாலியல் தொல்லை கொடுத்ததாக கடந்த வாரம் ஹைதராபாத் போலீஸில் புகார் அளி்க்கப்பட்டது. அதில் அந்தப் பெண், ‘‘கடந்த 2019-ம் ஆண்டு ஜானி மாஸ்டர், எனக்கு உதவி நடன இயக்குநர் வேலை கொடுத்தார். படப்பிடிப்புக்காக சென்னை, மும்பைக்கு சென்றிருந்தோம். அப்போது 18 வயது நிரம்பிய நிலையில், திருமண ஆசை காட்டி பாலியல் துன்புறுத்தல் செய்தார்'' என குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து போலீஸார் ஜானி மீது போக்சோ சட்டம், பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டல் உட்பட 5 பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதன் தொடர்ச்சியாக கடந்த செப்டம்பர் 20-ம் தேதி அவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து, ஹைதராபாத்தில் உள்ள சஞ்சல்குடா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், தனக்கு ஜாமீன் வழங்க கோரி ஜானி தாக்கல் செய்த மனு இன்று தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதி ஜுவாடி ஸ்ரீதேவி, ஜானி மாஸ்டருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
மேலும், நீதிமன்ற விசாரணைக்கு ஆஜாராக வேண்டும், வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும், பாதிக்கப்பட்ட பெண்ணை தொடர்புகொள்ள முயற்சிக்க கூடாது, வழக்கு தொடர்பாக ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கக் கூடாது. வெளிநாடு தப்பிச் செல்லக் கூடாது உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. முன்னதாக ’திருச்சிற்றம்பலம்’ படத்துக்காக அறிவிக்கப்பட்ட தேசிய விருதை பெற ஜானிக்கு நீதிமன்றம் 4 நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்கி இருந்தது. ஆனால், ஜானிக்கான தேசிய விருது ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.