கபிலன் வைரமுத்துவின் மாக்கியவெல்லி நாவலை வெளியிட்ட இயக்குநர் பாரதிராஜா!

kabilan variramuthu

குற்றப்பரம்பரை அரசியலை மையமாகக் கொண்ட கபிலன் வைரமுத்துவின் மாக்கியவெல்லி காப்பியத்தை இயக்குநர் பாரதிராஜா வெளியிட்டுள்ளார். கவிஞர் வைரமுத்துவின் மகனான கபிலன் வைரமுத்து பல்வேறு திரைப்படங்களில் பாடல்கள் எழுதியுள்ளார். மேலும் கதைகளும் எழுதியுள்ளார். தற்போது அவர் எழுதியுள்ள மாக்கியவெல்லி காப்பியம் கபிலன் வைரமுத்துவின் பன்னிரண்டாவது நூல், ஐந்தாவது நாவல். ’ஆகோள்’ முதல் பாகம் ஆங்கிலத்திலும் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மாக்கியவெல்லி காப்பியம் என்ற நாவலை இயக்குநர் பாரதிராஜா வெளியிட்டுள்ளார். இது 2022ஆம் வெளியான ஆகோள் என்ற நாவலின் இரண்டாம் பாகம். பிரிட்டிஷ் இந்தியாவின் குற்றப் பரம்பரை சட்டத்தையும், அதன் நவீன பரிணாமங்களையும் விவாதிக்கும் முறையில் கபிலன் வைரமுத்து இரண்டு நாவல்களையும் எழுதியுள்ளார். முதல் பாகத்தில் பன்னிரண்டு வயது சிறுவனாக இருந்த மாக்கியவெல்லி, இரண்டாம் பாகத்தின் மைய கதாபாத்திரமாக வருகிறான்.

மதுரை மாவட்டத்திற்குட்பட்ட எட்டு நாடுகள் என்ற பகுதியில் கதை நிகழ்வதாக சித்தரிக்கப்பட்டுள்ளது. 1801 தொடங்கி 2057 வரையிலான காலக்கட்டத்தின் கதையாக எழுதப்பட்டுள்ளது. பல வரலாற்று தகவல்கள் மற்றும் அறிவியல் தொழில்நுட்பம் ஆகியவை குறித்த இரண்டு ஆண்டுகள் கள ஆய்வுக்கு பின் கபிலன் வைரமுத்து இந்த நாவலை எழுதியிருப்பதாக பதிப்பாளர் வேடியப்பன் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேல் அரசு இணைய வெளியில் மேற்கொண்ட முக்கியமான முன்னெடுப்பு தான் இந்த இரண்டாம் பாகத்திற்கான முதல் பொறி என்று கபிலன் வைரமுத்து தன் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். நாவலுக்கென்று பிரத்யேகமாக மூல் என்ற கணினி மொழி உருவாக்கப்பட்டுள்ளது. மாக்கியவெல்லி காப்பியம் நூலை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் வண்ணம் வருகிற அக்டோபர் 6ஆம் தேதி சென்னை டிஸ்கவரி புக் பேலஸ் வளாகத்தில் ஆசிரியர் சந்திப்பு நடைபெறவுள்ளது.

Share this story