தங்கை பவதாரிணி குறித்த நினைவுகளை பகிர்ந்து கண்கலங்கிய கார்த்திக் ராஜா...!

karthik raja

பிரபல பாடகியும் இளையராஜாவின் மகளுமான பவதாரிணி கடந்த ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி புற்றுநோய் பாதிப்பால் உயிரிழந்தார். இவர் மறைந்து ஓராண்டு கடந்த நிலையில் அவரின் நினைவு அஞ்சலி கூட்டம் நேற்று(12.02.2025) நடைபெற்றது. இதில் இளையராஜா, கங்கை அமரன், வெங்கட் பிரபு, கார்த்திக் ராஜா உள்ளிட்ட இசைக்கலைஞர்கள் பலர் கலந்து கொண்டனர். ilayaraja

இந்த நிகழ்வில் கார்த்திக் ராஜா பேசுகையில், “எவ்வளவு தன்மையான மக்கள் இந்த தமிழ் மக்கள். எங்க குடும்பத்தோடு உட்கார்ந்திருக்கிற மாதிரி இருக்கிறது. பவதாரிணி மருத்துவமனையில் பிறந்தவுடன் அவளை கொஞ்சிய முதல் அண்ணன் நான். அவள் என்னைவிட யுவனுடன் ரொம்ப நெருக்கம். அவருடன் கொஞ்சி கொஞ்சி விளையாடுவாள்.karthik raja

அவளை இலங்கையில் இருந்து கொண்டு வரும்போது தமிழ் மக்கள் அவர்களுடைய வீட்டில் ஒரு நிகழ்வு நடந்தது போல் அன்பு செலுத்தினார்கள். அதை எங்கும் நான் பார்த்ததில்லை” என எமோஷ்னலாக கண்கலங்கினார். பின்பு மனம் தேறி பேசிய அவர், “பவதாவுக்கு இசைக்கச்சேரி என்றால் ரொம்ப பிடிக்கும். ஆனால் பதட்டமாகவே இருப்பாள். அவளை பாடகியாக உருவாக்க வேண்டும் என்பது எங்க அம்மாவின் ஆசை. அவள் வாய்ஸ் நல்லாயிருப்பதாக சொல்லுவார். ஆனால் அவளுக்கு உண்மையிலேயே மியூசிக் டைரக்டராக ஆக வேண்டும் என்பதுதான் ஆசை. அது இன்றைக்கு நிறைவேறியிருக்கிறது” என்றார். 

இதே நிகழ்வில் பவதாரிணி கடைசியாக இசையமைத்த ‘புயலில் ஒரு தோணி’ படத்தின் இசை தட்டு இளையராஜாவால் வெளியிடப்பட்டது. இப்படத்தை அறிமுக இயக்குநர் ஈசன் இயக்கியிருக்க அறிமுக நடிகர்கள் விஷ்ணு பிரகாஷ், அர்ச்சனா சிங் ஆகியோர் நடித்துள்ளனர். பி.ஜி. பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.

Share this story