‘காசேதான் கடவுளடா’ படத்திற்கு வந்த சிக்கல்... தயாரிப்பு நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு !

மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகியுள்ள ‘காசேதான் கடவுளடா’ படத்தின் ரிலீசை தள்ளி வைப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
ஆர். கண்ணன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'காசேதான் கடவுளடா'. பழம்பெரும் நடிகர் முத்துராமன் நடிப்பில் உருவாகி மாபெரும் வெற்றிப்பெற்ற நகைச்சுவை படத்தின் ரீமேக்காக இப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் ஹீரோயினாக ப்ரியா ஆனந்த் நடித்துள்ளார்.
இவர்களுடன் யோகி பாபு, கருணாகரன், ஊர்வசி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். ஆர்.கண்ணனின் மசாலா பிக்ஸ் நிறுவனம் மற்றும் எம்கேஆர்பி புரொடக்ஷன்ஸ் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன. தயாரிப்பு பணிகள் நடைபெற்று வரும் இப்படத்தின் ரிலீஸ் குறித்த இரு முறை அறிவிக்கப்பட்டு படம் வெளியாகவில்லை.
இந்நிலையில் இந்த படத்தை தயாரிக்க ராஜ்மோகன் என்பவரிடம் 1.75 கோடி பைனான்ஸ் வாங்கப்பட்டுள்ளது. ஆனால் வாங்கிய பணத்தை இதுவரை திருப்பி செலுத்தவில்லை என கூறப்படுகிறது. அதனால் பைனான்சியர் சார்பில் சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது பதிலளித்த பட தயாரிப்பு நிறுவனம், மனுதாரருக்கு தரவேண்டிய மீதித் தொகையை திருப்பித் தரும் வரை படத்தை திரையரங்கு மற்றும் ஓடிடியில் வெளியிட மாட்டோம் என்று உறுதியளித்துள்ளது. இதனால் படம் வெளியாகவதில் சிக்கல் தொடர்ந்து வருகிறது.