கவிஞர் புலமைப்பித்தன் மறைவு ஈடு செய்யமுடியாதது - இசையமைப்பாளர் இளையராஜா இரங்கல்
கவிஞர் புலமைப்பித்தன் மறைவையொட்டி இசையமைப்பாளர் இளையராஜா இரங்கல் தெரிவித்துள்ளார்.
சிறு வயது முதல் கவிதைகள் படைப்பதில் மிகுந்தஆர்வம் கொண்டவர் புலமைப்பித்தன். ராமசாமி என்ற தனது இயற்பெயர் கொண்ட மாற்றிக்கொண்ட இவர், தமிழ் ஆசிரியராக பணியை தொடங்கினார். அதன்பிறகு சினிமாவில் பாடலாசிரியராக அறிமுகமான புலமைப்பித்தன், எம்ஜிஆரின் பெரும்பாலான படங்களுக்கு பாடல்கள் எழுதி, அவரின் அன்பை பெற்ற ஆஸ்தான பாடலாசிரியராக இருந்தார். முதல்வராக எம்ஜிஆர் பொறுப்பேற்ற பிறகு தமிழக அரசின் அரசவைக் கவிஞராகவும் சில ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார்.

100 க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ள இவர், தமிழக அரசின் பெரியார் விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார். இந்நிலையில் 85 வயதாகும் புலப்பித்தன், கடந்த வாரம் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார். புலமைப்பித்தனின் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதேபோன்று இசையமைப்பாளர் இளையராஜா விடுத்துள்ள இரங்கல் செய்தியில், என்னுடைய இசையில் பலநூறு நல்ல திரைப்படங்களை எழுதினார். அவருடைய பாடல்களில் வார்த்தைகள் அழகிற்காக மட்டுமின்றி உயர்ந்த இலக்கியத் தரத்திற்காகவும் மக்களால் பாராட்டுப்பெற்றது. கவிஞரின் மறைவு நமது தமிழ் திரையுலகத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும். வயது மூப்பின் காரணமாக மறைந்த கவிஞரின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், மற்றும் தமிழ் திரையுலகைச் சார்ந்தவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.


