வரலாற்றுப் பின்னணியில் உருவாகும் ஹாரர் திரைப்படம் 'மடல்'...

வரலாற்றுப் பின்னணியில் உருவாகும் ஹாரர் திரைப்படமான 'மடல்' பூஜை சென்னையில் நடைபெற்றது.
பிஜேஎஸ் பிக்சர்ஸ் சார்பில் பிரசாந்த் ஜேசன் சாமுவேல் தயாரிக்கும் படம், ‘மடல்’.சிலநேரங்களில் சில மனிதர்கள், அன்பிற்கினியாள் போன்ற படங்களில் நடித்த பிரவீன் ராஜா இந்த படத்தின் கதாநாயகனாக நடிக்கிறார். சந்தானம் நடித்த 'இங்க நாங்க தான் கிங்கு' படத்தில் கதாநாயகியாக நடித்த பிரியாலயா நாயகியாக நடிக்கிறார்.
மேலும், நிழல்கள் ரவி, பாலசரவணன், விவேக் பிரசன்னா, கிருஷ்ண தயாள் என பலர் நடித்துள்ள இந்தப் படத்தை ஹரிசங்கர் ரவீந்திரன் இயக்குகிறார். இந்த படத்தின் பூஜையை சென்னையில் நடிகர் மணிகண்டன் தொடங்கி வைத்தார்.
இப்படம் பற்றி ஹரிசங்கர் ரவீந்திரன் கூறும்போது, “வரலாற்றுப் பின்னணியில் உருவாகும் ஹாரர் படம் இது. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த தமிழ்க் கலாச்சாரம் பற்றிய உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து, இதன் திரைக்கதையை உருவாக்கியுள்ளோம். தமிழ் சினிமாவில் ஹாரரில் இதுவரை யாரும் நெருங்காத புதிய கதைக் களத்தை இதில் பார்க்கலாம்” என்றார்.