‘தக் லைஃப்’ படத்தை சட்டவிரோதமாக வெளியிட உயர்நீதிமன்றம் தடை..

கமல்ஹாசன், சிலம்பரசன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள தக்லைப் திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடுவதற்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கமல்ஹாசன், சிலம்பரசன், த்ரிஷா உள்ளிடோர் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள தக்லைப் திரைப்படம் உலகெங்கிலும் நாளை வெளியாக உள்ளது. கன்னடமொழி குறித்து கமல்ஹாசன் பேசியது சர்ச்சையான நிலையில் கர்நாடகாவில் மட்டும் நாளை தக் லைஃப் படம் வெளியாகாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தக் லைஃப் படத்தின் சிறப்புக் காட்சிக்கும் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி நாளை ஒரு நாள் மட்டும் 5 காட்சிகள் திரையிடப்பட்டுள்ளன.
இந்த படத்தை சட்டவிரோதமாக 793 இணையதளங்கள் மற்றும் கேபிள் டிவிகள் ஆகியவற்றில் வெளியிடப்படுவதை தடுக்க வேண்டுமென அரசு மற்றும் தனியார் இணைய தள சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு உத்தரவிடக் கோரி படத்தை தயாரித்துள்ள ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் நிறுவனம் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியம் ஆஜராகி, உலகம் முழுவதும் 3 ஆயிரத்து 500 திரையரங்குகளில் தக்லைப் படம் வெளியாகயுள்ளதாகவும், மிகுந்த பொருட்செலவில் படத்தை தயாரித்துள்ளதால், திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியானால் தயாரிப்பாளருக்கு பெருத்த நஷ்டம் ஏற்படும் என்றும், திரை கலைஞர்களின் வாழ்க்கை பாதிக்கப்படும் என்றும் வாதிட்டார். இதையடுத்து,தக்லைப் திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்த நீதிபதி, அவ்வாறு வெளியாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இணையதள சேவை நிறுவனங்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.