மீண்டும் கமலுடன் இணைந்து நடிக்கிறாரா திரிஷா ?... மணிரத்னம் படத்தின் புதிய அப்டேட்
நீண்ட இடைவெளிக்கு பிறகு உலகநாயகன் கமலுடன் நடிகை திரிஷா நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென்னிந்தியாவில் பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை திரிஷா. ரஜினி, கமல், விஜய், அஜித் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். சமீபத்தில் ‘பொன்னியின் செல்வன்’ குந்தவையாக நடித்து அசத்தியிருந்தார். இதையடுத்து நேற்று வெளியான ‘ராங்கி’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதில் முழுக்க முழுக்க ஆக்ஷன் ஹீரோயினாக நடித்துள்ளார்.
இந்த படங்களை அடுத்து விஜய்யின் ‘தளபதி 67’, அஜித் - விக்னேஷ் சிவன் கூட்டணியில் உருவாகும் படம் என அடுத்தடுத்து ஒப்பந்தமாகி வருகிறார். இந்நிலையில் ‘மன்மதன் அம்பு’ படத்திற்கு பிறகு மீண்டும் கமலுடன் இணைந்து திரிஷா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
கமலின் 234வது படமாக உருவாகும் இப்படத்தை மணிரத்னம் இயக்கவுள்ளார். 35 ஆண்டுகளுக்குப் பிறகு கமல் - மணிரத்னம் கூட்டணி இணைந்துள்ளது. இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ், மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் மற்றும் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து தயாரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கு இசைப்புயல் ஏ. ஆர் ரகுமான் இசையமைக்க உள்ளார்.