கீர்த்தி சுரேஷ் திருமணத்தில் பட்டு வேஷ்டி சட்டையில் மாரி செல்வராஜ்; புகைப்படம் வைரல்
நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணத்தில் பங்கேற்ற புகைப்படங்களை பதிவிட்டு இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் நடிகர் சூரி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ், சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக ‘இது என்ன மாயம்’ படத்தில் கதாநாயகியாக நடித்தார். பின்னர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரஜினிமுருகன், ரெமோ விஜய்யுடன் பைரவா, சர்கார், ரஜினியுடன் அண்ணாத்த ஆகிய படங்களில் நடித்தார்.
நாக் அஷ்வின் இயக்கத்தில் சாவித்ரி வாழ்க்கை வரலாறு ‘நடிகையர் திலகம்’ படத்தில் கீர்த்தி சுரேஷ் சாவித்ரியாக நடித்து பாராட்டை பெற்றார். மேலும் அந்த படத்திற்கு தேசிய விருது வென்றார். தற்போது தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பல்வேறு படங்களில் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் அவரது நீண்ட கால நண்பரான ஆண்டனி தட்டில் என்பவருக்கும் கடந்த டிசம்பர் 12ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.
கீர்த்தி சுரேஷ் திருமணம் கோவாவில் நடைபெற்ற நிலையில், அதில் திரைப் பிரபலங்கள் பலர் பங்கேற்று திருமண தம்பதியை வாழ்த்தினர். நடிகர் விஜய், த்ரிஷா ஆகியோர் திருமணத்தில் பங்கேற்றனர். கீர்த்தி சுரேஷ் தனது திருமணத்தில் நடிகர் விஜய் பங்கேற்ற புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார்.
அதேபோல் நடிகர் சூரி மற்றும் இயக்குநர் மாரி செல்வராஜ் ஆகியோர் கீர்த்தி சுரேஷ் திருமணத்தில் பங்கேற்ற புகைப்படத்தை பதிவிட்டுள்ளனர். இயக்குநர் மாரி செல்வராஜ் பட்டு வேஷ்டி சட்டையில் திருமணத்தில் பங்கேற்றார். நடிகை கீர்த்தி சுரேஷும் அவர்களது பதிவிற்கு நன்றி தெரிவித்து பதிலளித்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.