திரைப்பட வசனம் போல பேசிவிட்டு கைத்தட்டல் வாங்க முயற்சிக்கும் விஷயம் இல்லை இந்த பேரிடர்!- என மேயர் பிரியா பதிலடி!

photo

நடிகர் விஷால் வீடுகளில் வெள்ளம் புகுந்தது குறித்து காட்டமாக பேசி வீடியோ பதிவிட்ட நிலையில் அதற்கு மேயர் பிரியா பதிலடி கொடுத்துள்ளார்.

photo

“மழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. நான் அண்ணா நகரில் உள்ளேன் இங்கே இந்த கதி என்றால் மற்ற இடங்களில்? 2015ல் இதேப்போல நடக்கும் போது அனைவரும் இறங்கி வேலை செய்தோம். முடிந்த அளவு பொது மக்களுக்கு சேவை செய்தோம். 8 வருடம் கழித்து அதைவிட மோசமான நிலையில் இருப்பது கேள்விக்குறியாக உள்ளது. மழை நீர் சேமிப்பு, மழைநீர் வடிகால் போன்ற திட்டங்களை சென்னை பொருநகர மாநகராட்சி அறிவித்தது அது எங்கே  என தெரியவில்லை?

ஒரு நடிகனாக அல்ல வாக்காளர் என்ற முறையில் இதை நான் கேட்கிறேன். சென்னை தொகுதி எம்.எல்.ஏக்கள் நிலைமமையை சரி செய்து கொடுக்க வேண்டும். பொது மக்கள சேவை செய்வது ஒரு புறம் இருக்கட்டும் அந்தந்த தொகுதி எம்.எல்.ஏக்கள் களத்தில் இறங்கி பணியாற்றினால் மக்களுக்கு தன்னம்பிக்கையாக இருக்கும்.

photo

குழந்தைகள், சீனியர் சிட்டிசங்கள் உள்ள வீடுகளில் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இது பொது பிரச்சனை தண்ணீர் தேங்கியுள்ளது தர்மசங்கடமான, கேவலமான ஒரு விஷயமாக பார்க்கிறேன். உடனடியாக சென்னை பெருநகர மாநகராட்சி, அரசு ஊழியர்கள் இறங்கி பணிகளை விரைந்து செய்யுங்கள், நாங்கள் எதற்காக வரி கட்டுகிறோம் என கேட்க வைக்காதீர்கள்.” என வீடியோவில் நடிகர் விஷால்  கூறியிருந்தார். அதற்கு பதில் கொடுக்கும் விதமாக மேயர் பிரியா “ 2015 அம்மையார் ஜெயலலிதா ஆட்சியில் ஏற்பட்ட பெருவெள்ளத்தை விட மோசமான நிலை இப்போது ஏற்பட்டிருப்பது போல நடிகர் விஷால் சொல்லியிருக்கிறார். திரைப்பட வசனம் போல பேசிவிட்டு கைத்தட்டல் வாங்க முயற்சிக்கும் விஷயம் இல்லை இந்த பேரிடர்!

photo

2015-ம் ஆண்டு ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 289 பேர் பலியானார்கள். 23.25 லட்சம் வீடுகள் நீரில் மூழ்கின. அப்படியான நிலையா இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது? 2015-ல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு விடுமுறை எதுவும் அறிவிக்கப்படவில்லை. செம்பரம்பாக்கம் ஏரியைகூட முன்னறிவிப்பு இன்றி திறந்துவிட்டார்கள். இன்று மாண்புமிகு முதலமைச்சரின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கிறது. பல இடங்களில் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளார்கள். சாய்ந்த மரங்கள் அகற்றப்பட்டுள்ளன.


திமுக பொறுப்புக்கு வந்த 2021 மே மாதத்தில் இருந்து மழைநீர் வடிகால் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வந்தது. அப்படியான பணிகளால்தான் சென்னை காப்பாற்றப்பட்டிருக்கிறது. அந்த மழைநீர் கால்வாய்கள் மூலம்தான் கடந்த வாரம் முன்பு வரை பெய்த மழைநீர் எல்லாம் வெளியேறியது. 2015 பெருவெள்ளத்திற்கு பிறகும் ஐந்தரை ஆண்டுகளை ஆண்டது அதிமுக அரசுதான். திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு பத்தாண்டுகளாக அதிமுகதான் ஆட்சியில் இருந்தது. மழைநீர் வடிகால் திட்டத்தை முதன்மையான திட்டமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது சென்னை மாநகராட்சி.

அதனை எல்லாம் பலர் பாராட்டி எழுதியது எல்லாம் உங்களுக்கு தெரியுமா? இப்போது பெய்துள்ள பெருமழை 2015-ம் ஆண்டைவிட அதிகம். பல ஆண்டுகளில் வரலாறு காணாத மழை. புயலால் கடல் கொந்தளிப்பு அதிகம் இருப்பதால்தான் மழைநீர் கால்வாய் மூலம் கடலில் கலக்க முடியாத சூழலில் மழைநீர் தேங்கியது. அவர்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் களத்தில் நின்று அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும், மாநகராட்சி ஊழியர்களும் செய்து வருகிறார்கள்.

அரசியல் செய்ய முயலாமல் கோரிக்கை ஏதேனும் இருந்தால் தெரிவிக்கவும். அரசு நிறைவேற்றித் தரும்! படிப்படியாக மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. சுமார் 6 லட்சம் உணவு பொட்டலங்களை இதுவரை வழங்கியிருக்கிறோம். வெள்ளம் உங்கள் வீட்டிற்கு மட்டும் வரவில்லை. ஒட்டுமொத்த சென்னை மக்களும்தான் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.” என பதிலடி கொடுத்துள்ளார் மேயர் பிரியா.

Share this story