அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு 2வது இடம்தான் - நித்யா மேனன் வேதனை
நடிகை நித்யா மேனன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர். இவர் விஜய், தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். மேலும் இவர் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்ததற்காக தேசிய விருதையும் வென்றுள்ளார். அடுத்தது தனுஷின் இட்லி கடை திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் நித்யா மேனன். இதற்கிடையில் இவர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவாகி வரும் காதலிக்க நேரமில்லை திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்க ஏ ஆர் ரகுமான் இதற்கு இசை அமைத்திருக்கிறார். வருகின்ற பொங்கல் தினத்தன்று இந்த படம் திரைக்கு வர தயாராகி வருகிறது. இதற்கிடையில் இந்த படத்தின் டிரைலர் நேற்று (ஜனவரி 7) வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.
இந்த ட்ரெய்லரை பார்க்கும்போது இப்படத்தில் ஜெயம் ரவியை விட நித்யா மேனனுக்கு வலுவான கதாபாத்திரமாக இருக்கும் போல் தெரிகிறது. இந்நிலையில் இந்த படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நித்யா மேனன் ,பெண்களுக்கு சினிமாவில் மட்டுமல்ல அனைத்து துறைகளிலும் இரண்டாவது இடம்தான் என்று பேசியுள்ளார். “நான் நிறைய பெண் இயக்குனர்களிடம் பணியாற்றியுள்ளேன். காதலிக்க நேரமில்லை படத்தின் இயக்குனரும் பெண்தான். அவர் மிகவும் மென்மையானவர். ஜாலியாக நண்பர்கள் எல்லாம் சேர்ந்து படம் பண்ணினால் எப்படி இருக்கும் அப்படித்தான் இந்த படத்தின் படப்பிடிப்பும் இருந்தது. பெண்களுக்கு சினிமாவில் அனைத்து துறைகளிலும் இரண்டாவது இடம் தான். ஒரு காதல் படம் என்றால் எளிதாக நடிக்கலாம் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் அது அப்படி இல்லை. ஒரு படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தாலும் நாம் இரண்டாவதாக தான் இருப்போம். சினிமாவில் மட்டுமல்ல அனைத்து துறைகளிலும் அப்படி தான் இருக்கிறது. இதை காட்டும் விதத்தில்தான் இந்த படம் இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.