யார் நம்பர் ஒன் ?... மீண்டும் பரபரப்பை ஏற்படுத்திய போனி கபூர் !
யார் நம்பர் ஒன் என்ற சர்ச்சைக்கு 'துணிவு' படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் விளக்கம் அளித்துள்ளார்.
அஜித் நடித்துள்ள 'துணிவு' மற்றும் விஜய் நடித்துள்ள 'வாரிசு' ஆகிய இரு படங்களும் பொங்கலையொட்டி நாளை உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இரண்டு நடிகர்களும் முன்னணி நடிகர்கள் என்பதால் திரையரங்குகள் ஒதுக்குவதில் சிக்கல் எழுந்தது. அப்போது நம்பர் ஒன்னாக இருக்கும் விஜய்க்கு அதிக திரையரங்குகளை ஒதுக்கவேண்டும் என்று 'வாரிசு' படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ தெரிவித்திருந்தார்.
இது திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தியது. தில் ராஜுவின் பேச்சுக்கு அஜித் ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். ஆனால் தன்னுடைய பேச்சு தவறான புரிந்துக் கொள்ளப்பட்டது என்று தில் ராஜூ விளக்கம் அளித்தார். இந்த விளக்கத்தை ரசிகர்கள் ஏற்க மறுத்தனர். இதையடுத்து இரண்டு படங்களுக்கும் சமமான திரையரங்குகள் ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில் இணையத்தள தொலைக்காட்சி ஒன்றிற்கு நேர்காணல் அளித்த போனி கபூர்,. விஜய் நெம்பர் ஒன் என்று கூறுவது தில்ராஜுவின் மனநிலை. நம்பர் ஒன் என்பதில் எனக்கு எந்த நம்பிக்கையும் இல்லை. என்னை பொறுத்தவரை கன்டென்ட் தான் நம்பர் ஒன். அதனால் தான் பொன்னியின் செல்வன், லவ் டுடே ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது என்று கூறினார்.