தியேட்டரில் இருக்கும் சுதந்திரம் ஓடிடியில் இல்லை - வெற்றிமாறன் கருத்து !
ஓடிடியில் திரைப்படங்கள் வெளியாவது குறித்து இயக்குனர் வெற்றிமாறன் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் வித்தியாசமான இயக்குனர்களில் வெற்றிமாறனும் ஒருவர். தற்போது சூரி மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் விடுதலை படத்தை இயக்கி வருகிறார். இறுதிக்கட்ட பணியில் இருக்கும் இப்படம் வரும் மார்ச் மாதம் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சென்னை இலக்கிய தின விழா நடைபெற்று வருகிறது. இதில் கலந்துக்கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வெற்றிமாறன், கடந்த மூன்று ஆண்டுகள் ஓடிடித் தளங்கள் ஒரு பெரிய சுதந்திரமாக எனக்கு தோன்றியது. ஆனால் தியேட்டர் அனுபவத்தில் இருக்கும் சுதந்திரம், வேறு எந்த வடிவிலும் வரவே வராது என்றார்.
மேலும் பேசிய அவர், மக்களுக்கான சினிமா, அதனுடைய முழு சுதந்திரம், மக்களுக்காக எடுக்கப்பட்டதை மக்களிடம் திரையிடும்போது தான் இருக்கும். அதனால் தியேட்டரில் படம் பார்க்கும் அனுபவம் தான் சிறந்தது என்று கூறினார்.