பாகிஸ்தான் நடிகர் நடித்த பாலிவுட் படத்துக்கு இந்தியாவில் தடை...!

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தான் நடிகர் நடித்த பாலிவுட் படத்தை வெளியிட இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அறிமுக இயக்குநர் ஆர்த்தி பக்டி இயக்கத்தில் பாகிஸ்தான் நடிகர் ஃபவத்கான், வாணி கபூர் நடித்துள்ள பாலிவுட் படம் ‘அபிர் குலால்’ (abir gulaal). இந்தப் படம் வரும் மே 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருந்தது. இது ஃபவத்கானின் கம்பேக் படமாக இருக்கும் என கூறப்பட்டது.இவர் முன்னதாக ‘ஏ தில் ஹை முஷ்கில்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். உரி தாக்குதலுக்குப் பிறகு, அவர் மற்ற பாகிஸ்தான் கலைஞர்களுடன் சேர்ந்து, இந்தி படங்களில் பணியாற்ற தடை விதிக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது அவர் நடித்த படத்தை இந்தியாவில் திரையிட தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பஹல்காம் தாக்குதல் குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் கண்டனம் தெரிவித்திருந்த ஃபவத் கான், “பஹல்காமில் நடந்த கொடூரமான தாக்குதல் செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். இந்த கொடூரமான சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக வருந்துகிறேன். இந்த கடினமான நேரத்தில் அவர்களின் குடும்பங்களுக்காக பிரார்த்திக்கிறேன்” என தெரிவித்திருந்தார்.நடிகை வாணி கபூர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “பஹல்காமில் அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து பேச முடியாமல் வார்த்தைகளின்றி மனமுடைந்து போனேன். அவர்களது குடும்பத்திற்காக பிரார்த்திக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.