தீ விபத்தில் காயமடைந்த பவன் கல்யாண் மகன்... சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்...

சிங்கப்பூரில் தீ விபத்தில் காயமடைந்த பவன் கல்யாண் மகன் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆந்திர மாநில துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாணின் மகன் மார்ச் சங்கர், சிங்கப்பூரில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு அங்கு நடைபெற்ற தீ விபத்து ஒன்றில் அவர் காயமடைந்தார். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று தற்போது வீடு திரும்பியுள்ளார்.விபத்து நடந்த பின், பவன் கல்யாண், அவரது அண்ணன் சிரஞ்சீவியுடன் சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றார். இது குறித்து சிரஞ்சீவி, “எங்கள் குழந்தை மார்ச் சங்கர் வீடு திரும்பியுள்ளார். ஆனால், அவர் இன்னும் குணமடைய வேண்டும். எங்கள் குல தெய்வமான ஆஞ்சநேய சுவாமியின் அருளாலும் கருணையாலும் அவர் விரைவில் முழுமையாக ஆரோக்கியமாகி இயல்பு நிலைக்குத் திரும்புவார்.
நாளை ஹனுமான் ஜெயந்தி. அந்தச் சிறு குழந்தையை ஒரு பெரிய ஆபத்து மற்றும் சோகத்திலிருந்து காப்பாற்றி அந்த இறைவன் எங்களுடன் நின்றார். இந்த சந்தர்ப்பத்தில் அந்தந்த நகரங்கள் மற்றும் பகுதிகளில் உள்ள அனைவரும் எங்கள் குடும்பத்திற்கு ஆதரவாக நின்று மார்க் சங்கர் விரைவில் குணமடைய வாழ்த்தினர்.அவர்கள் குழந்தைக்காக பிரார்த்தனை செய்து ஆசீர்வாதங்களை வழங்கினார்கள். என் சார்பாகவும், தம்பி கல்யாண் பாபு மற்றும் எங்கள் முழு குடும்பத்தின் சார்பாகவும் உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம்,” என்று குறிப்பிட்டுள்ளார்.மகன் மார்க் சங்கர் முழுமையாகக் குணமடையும் வரை பவன் கல்யாண் சிங்கப்பூரிலேயே தங்கியிருப்பார் எனத் தெரிகிறது.