'விடாமுயற்சி' கதை என்னுடையது இல்லை : இயக்குனர் மகிழ் திருமேனி

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், அர்ஜுன், த்ரிஷா, ரெஜினா, ஆரவ் நடித்து பிப்ரவரி 6ம் தேதி வெளியாக உள்ள படம் 'விடாமுயற்சி'. பொங்கலுக்கு வெளியாக வேண்டிய படம் திடீரென தள்ளிப் போனது ரசிகர்களுக்கு அதிர்ச்சியைத் தந்தது. 1997ல் வந்த ஹாலிவுட் படமான 'பிரேக் டவுன்' படத்தின் ரீமேக்காக இப்படத்தை உருவாக்கியதில் ஏற்பட்ட சிக்கல்தான் பட வெளியீடு தள்ளிப் போனதற்குக் காரணம் என கூறப்பட்டது.
தற்போது, படம் தொடர்பான பிரச்சனைகள் சுமுகமாக முடிவுக்கு வந்ததால் விடாமுயற்சி படம் வரும் 6ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விடாமுயற்சி படத்தின் கதை தன்னுடையது இல்லை என அப்படத்தின் இயக்குனர் மகிழ் திருமேனி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் ஒரு நேர்காணலில், அஜித் சார் மேனேஜர் சுரேஷ் சந்திராவை ரொம்ப வருஷமா தெரியும். எனக்கு அவர் சகோதரர் மாதிரி. ஆனா, அஜித் சார்கிட்டகதை சொல்லணும்னு வாய்ப்புக் கேட்டதில்லை. அவர்கிட்ட கதைசொல்ற அளவுக்கு என் தகுதியை வளர்த்துக்கணும்னு நினைச்சேன். ‘மீகாமன்’ படம் பண்ணும்போது, அஜித் சாரோட படம் பண்ணுற வாய்ப்பு தொடர்பா ஒரு உரையாடல் நடந்துச்சு. பிறகு அது தொடரலை. ரோகாந்த் இயக்கிய ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படத்துல நடிக்கறதுக்காக, நான் பழனிக்கு போயிருந்தேன். அப்ப சுரேஷ் சந்திரா, ‘அஜித் சாருக்கு கதை வச்சிருக்கீங்களா? இந்த மாதிரி வேணும்’னு ஒரு ஐடியா சொன்னார்.
நான் பேசினேன். பிறகு ‘கலகத்தலைவன்’ படம் முடிஞ்சு 2 வாரம் கழிச்சி சுரேஷ் சந்திரா, அஜித் சார் உங்ககிட்ட பேசுவார்னு சொன்னார். அந்த தருணத்தை என்னால மறக்கவே முடியாது. அஜித் சார் சொன்ன முதல் வார்த்தை, “என்னை கண்மூடித்தனமா நம்புங்க மகிழ்’! சரின்னு சொன்னேன் நான். இதன் மூலக் கதை என்னுடையது இல்லை. நான் அஜித் சார் நடிப்பில் பண்ண நினைச்சது, ஒரு ஆக் ஷன் த்ரில்லர். இந்தப் படத்தோட கதையை அஜித் சார்தான் சொன்னார். அவரோட இமேஜுக்கும் இந்தப் படத்துல அவர் பண்ணியிருக்கிற கேரக்டருக்கும் தொடர்பே இல்லை. இது ஒரு மாஸ் என்டர்டெயினர் படம் இல்லை. ரசிகர்கள் அதை எதிர்பார்த்து வரவேண்டாம். அஜித் சார் இப்படி படம் பண்ணணும்னு ஆசைப்பட்டார்.
அவருக்கு இப்ப இருக்கிற பிம்பத்துக்கு முற்றிலும் முரண்பாடா இந்தப் படம் இருக்கும். இதுல ஒரு சூப்பர் ஹீரோவை எதிர்பார்த்து வந்தீங்கன்னா, இது அப்படிப்பட்ட படமா இருக்காது. நம்மள்ல ஒருத்தன் ஹீரோவா இருந்தா எப்படியிருக்குமோ அதுதான் படம். நான் ஆக் ஷன் டைரக்டரா அறியப்பட்டிருக்கேன். இப்படியொரு கதைக்களத்தை எங்கிட்ட ஏன் கொடுக்கிறீங்கன்னு அவர்கிட்ட கேட்க நினைச்சிருந்தேன். ஆனா, அந்த வாய்ப்பை எனக்குக் கொடுக்காம, அவரே எனக்குச் சொன்னார், “மகிழ், நீங்களும் சரி, நானும் சரி, நம்மளோட ‘கம்ஃபோர்ட் ஸோன்’ல இருந்து வெளிய வரணும். அப்படியொரு படமா இது இருக்கணும்“னு சொன்னார். அவர் கொடுத்த கதையில அந்த மீட்டருக்குள்ள என்னால என்ன பண்ண முடியுமோ, அதை பண்ணியிருக்கேன். முன் முடிவுகளை கழற்றி வச்சுட்டு இந்தப் படத்தை பார்த்தால், நிச்சயமா சுவாரஸ்யமான படமா இருக்கும் என தெரிவித்துள்ளார்.