‘பிசாசு 2’ படத்தை மார்ச் மாதம் வெளியிட திட்டம்
மிஷ்கின் இயக்கியுள்ள ‘பிசாசு 2’ படத்தை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பிசாசு 2’ திரைப்படம் நீண்ட வருடங்களாக தயாரிப்பில் உள்ளது. தயாரிப்பு நிறுவனத்துக்கு ஏற்பட்ட பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுக் கொண்டே வருகிறது.தற்போது ஆண்ட்ரியா பிறந்த நாளை முன்னிட்டு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது படக்குழு. அதில் ‘2025-ம் ஆண்டு வெளியீடு’ என்று அறிவித்துள்ளது. இது குறித்து விசாரித்தால் மார்ச்சில் வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பதாக கூறுகிறார்கள்.
ராக்போர்ட் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள ‘பிசாசு 2’ படத்தில் ஆண்ட்ரியா, பூர்ணா, ராஜ்குமார் பிச்சுமணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கவுரவ கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். கார்த்திக் ராஜா இசையமைப்பாளராகப் பணிபுரிந்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானல், திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் நடைபெற்றுள்ளது. அடர்ந்த காட்டுப் பகுதிகளில் சில முக்கியக் காட்சிகளைப் படமாக்கி இருக்கிறார் மிஷ்கின்.