கோலாகலமாக நடந்த PS 1 படத்தின் வெற்றி விழா; ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த படக்குழு.
பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றி விழா இன்று சென்னையில் நடைபெற்றது, இந்த விழாவில் படக்குழுவினர் கலந்துக்கொண்டு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
விழாவில் படத்தின் இயக்குநர் மணிரத்னம், லைகா தயாரிப்பு நிறுவனத்தின் தலைமை அதிகாரி சுபாஷ்கரன், நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, பார்த்திபன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். படம் குறித்து இயக்குனர் மணிரத்னம் பேசியதாவது , ''இந்தக் கதையை படமாக்க வேண்டும் என்பது ஒரு பேராசை. அந்தப் பேராசைக்கு அங்கீகாரம் கொடுத்தவர்களுக்கு நன்றி. நடிகர், நடிகைகள் சிறப்பாக பணியாற்றினர். கொரோனா சமயத்தில் வெயிட் போடாமல் கடினமாக உழைத்தவர்களுக்கு நன்றி'' என்றார்.
தொடர்ந்து பேசிய பார்த்திபன், “மணிரத்னத்தின் மூலமாக ‘பொன்னியின் செல்வன்’ படம் திரைக் காவியமாகியிருக்கிறது. ரூ.500 கோடி வசூலித்துள்ள இந்த படத்தில் நானும் இருக்கிறேன் என்பது பெருமையாக உள்ளது. இந்தப் படத்தில் நடித்தது மகிழ்ச்சியான விஷயம்” என கூறியுள்ளார்.
நடிகர் கார்த்தி பேசுகையில், ''எல்லோரும் ஒரே செட்டில் இருந்து பணியாற்றியது புது அனுபவமாக இருந்தது. அதை பற்றி இன்னும் 10 வருடங்களுக்கு பேசிக்கொண்டிருக்கலாம். படத்தை திரையில் பார்க்கும்போது புதிதாக இருந்தது. தமிழ்நாடு கொண்டாடும் படமாக உருவாகியிருக்கிறது பொன்னியின் செல்வன் மகிழ்ச்சியாக உள்ளது'' என தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளர்.
நடிகர் ஜெயம் ரவி பேசுகையில்,” இந்த வெற்றியை விவரிக்க வார்த்தை இல்லை, மனது நிறைவாக இருக்கிறது.மணிரத்னம் இப்படி ஒரு வெற்றியை கொடுத்து விட்டு அமைதியாக உள்ளார் அவரை நாம் கொண்டாட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
நடிகர் சியான் விக்ரம் பேசுகையில், ''என்னால் படத்திலிருந்து வெளியே வரமுடியவில்லை. அதன் பாதிப்பு நீண்டுகொண்டேயிருக்கிறது. எத்தனையோ படங்களில் நான் நடித்துள்ளேன், ஆனால் பொன்னியின் செல்வன் படதிற்கு மட்டும் தினமும் சமூக வலைதளத்தில் வரும் விமர்சனத்தை நான் படிப்பேன், இந்தப் படம் எனக்கு பெரிய எமோஷன். '' என கூறினார்.
இந்த வெற்றி விழாவில் குறிப்பிடத்தக்க நிகழ்வு என்ன வென்றால் மெட்ராஸ் டாக்கீஸ் - லைகா சார்பில் கல்கி அறக்கட்டளைக்கு ரூ.1 கோடி ரூபாய் நன்கொடை வழங்கப்பட்டது.