மறைமுகமாக காதலை உறுதிப்படுத்திய ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா...

நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் நடிகர் விஜய் தேவரகொண்டா காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகும் நிலையில், இருவரும் அதனை மறைமுகமாக உறுதிப்படுத்தியுள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
நடிகை ராஷ்மிகா மந்தனா தனது பிறந்த நாளை கொண்டாடுவதற்காக ஓமன் நாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு எடுக்கப்பட்ட பீச் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவிட்டார்.இந்த நிலையில், அதே ஓமன் நாட்டில் தான் நடிகர் விஜய் தேவரகொண்டாவும் இருப்பதாக கூறப்படுகிறது. அவர் பீச்சில் குதிரை சவாரி செய்யும் புகைப்படங்களை பதிவு செய்துள்ளதால், இருவரும் ஒரே நாட்டில் இருப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளதாக நெட்டிசன்கள் கண்டுபிடித்துள்ளனர்.
ராஷ்மிகா மந்தனாவின் புகைப்படத்தில் காணப்படும் பின்னணி மற்றும் விஜய் தேவரகொண்டாவின் புகைப்பட பின்னணி ஒரே மாதிரியாக இருக்கின்றன. மேலும், இரு புகைப்படங்களிலும் சிவப்பு கொடி போன்ற அம்சங்கள் காணப்படுவதால், அவர்கள் இருவரும் ஓமன் நாட்டில் தான் இருக்கிறார்கள் என்று நெட்டிசன்கள் சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளாக விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவரும் காதலிக்கிறார்கள் என்ற தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால், இதுவரை இருவரும் இதைப் பற்றிய எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.
இந்த நிலையில், ராஷ்மிகாவின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் விஜய் தேவரகொண்டாவும் கலந்து கொண்டிருக்கிறார் என்ற தகவலால், அவர்கள் விரைவில் தங்கள் காதலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.