சூர்யாவிற்கு வைர மோதிரம் பரிசளித்த ரெட்ரோ விநியோகஸ்தர்...

surya

ரெட்ரோ திரைப்படம் ரூ. 100 கோடி வசூல் செய்ததையொட்டி, சூர்யாவுக்கு வைர மோதிரம் பரிசாக அளிக்கப்பட்டது.


2 டி என்டர்டெய்ன்மென்ட் - ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான 'ரெட்ரோ' திரைப்படம் திரை அரங்குகளில் வெளியாகி முதல் வார இறுதியில் உலகம் முழுவதிலும் ரூ. 100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையிலும், படத்தை வெற்றி பெறச் செய்த ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் நன்றி தெரிவிப்பதற்காக படக் குழுவினர் பிரத்யேக நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தனர். சென்னையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் திரையுலகினரும், படக் குழுவினரும், ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் 'ரெட்ரோ' படத்தை தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் விநியோகம் செய்த சக்தி பிலிம் ஃபேக்டரி நிறுவனத்தின் உரிமையாளரான சக்தி வேலன், படத்தின் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், நாயகனான சூர்யாவிற்கும் வைர மோதிரத்தைப் பரிசாக அளித்தார்.
 surya
இது தொடர்பாக விநியோகஸ்தர் சக்தி வேலன் குறிப்பிடுகையில், "இவ்வருடத்தில் வெளியான திரைப்படங்களில் அதிக இலாபம் தந்தத் திரைப்படமாக ரெட்ரோ அமைந்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தோம். இத்திரைப்படம் உருவாக காரணமான தயாரிப்பாளர்கள் மற்றும் முக்கிய கலைஞர்களான இயக்குநர், இசையமைப்பாளர், பாடலாசியர், ஒளிப்பதிவாளர் போன்றவர்களுக்கு வைர மோதிரங்களைப் பரிசாக வழங்கினோம். சூர்யா அண்ணாவிற்கு மோதிரம் வழங்கிய போது அதனை உடனடியாக
மீண்டும் எனக்கே திரும்ப அணிவித்து, தன் அன்பையும் ஆதரவையும் பகிர்ந்து கொண்டார், அது என் வாழ்வில் மற்றொரு நெகிழ்வான தருணமாக மாறியது. இந்நெகிழ்ச்சி எனக்கு முதல் முறையல்ல, முன்பு 'கடைகுட்டி சிங்கம்' வெற்றி விழாவில் தங்கச் சங்கிலி மற்றும் 'விருமன்' வெற்றி விழாவில் வைர பிரேஸ்லெட் பரிசாக வழங்கும் போதும் சூர்யா அண்ணா எனக்கே அதை திரும்ப அணிவித்தார்." என்றார்.

Share this story