தொடரும் வதந்திகள்.. சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என எச்சரித்த சாய் பல்லவி..
நடிகை சாய் பல்லவி குறித்து தமிழின் பிரபலமான பத்திரிகை வெளியிட்ட செய்திக்கு மறுப்பு தெரிவித்து தனது கண்டனங்களை தெரிவத்துள்ளார்.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து சாய் பல்லவி நடித்த படம் அமரன். இந்தப் படம் இந்திய அளவில் மெகாஹிட் அடித்த நிலையில், அவர் தற்போது பாலிவுட்டில் ரன்பீர் கபூருடன் 'ராமாயணம்' என்ற படத்தில் நடித்து வருகிறார். ஆனால், இந்த படத்தில் நடிப்பதால் அவர் சைவ உணவு உண்பவராக மாறிவிட்டதாக தமிழின் பிரபல பத்திரிகை நிறுவனம் ஒன்று இணையதளத்தில் செய்தி வெளியிட்டது.
இதைப் பார்த்த நடிகை சாய் பல்லவி தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியதோடு, இதுபோன்று மீண்டும் ஆதாரமற்ற வதந்திகளை செய்திகளாக வெளியிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார். நேற்று டிசம்பர் 11 ஆம் தேதி இரவு தமிழ் செய்தி வலைத்தளத்தின் செய்தியைப் பகிர்ந்து கொண்ட சாய் பல்லவி, ராமாயணம் படத்தில் நடித்து வருவதற்காக நடிகை சாய் பல்லவி சைவமாக மாறியுள்ளதாகவும், அவர் எங்கு சென்றாலும் சைவ உணவுகளை மட்டுமே சமைக்க சிறப்பு சமையல்காரர்கள் இருப்பார்கள் என்றும் அந்த செய்தியில் குறிப்பிட்டிருந்தது.
Most of the times, Almost every-time, I choose to stay silent whenever I see baseless rumours/ fabricated lies/ incorrect statements being spread with or without motives(God knows) but it’s high-time that I react as it keeps happening consistently and doesn’t seem to cease;… https://t.co/XXKcpyUbEC
— Sai Pallavi (@Sai_Pallavi92) December 11, 2024
மேலும், சாய் பல்லவி இந்தப் படத்தில் சீதை கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளதால் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவால் கோவமடைந்த சாய் பல்லவி அந்த செய்தியை டேக் செய்து தனது மறுப்பு கருத்தை தெரிவித்துள்ளார். அந்தப் பதிவில், "பல முறை, உண்மையில், ஒவ்வொரு முறையும், எனக்கு எதிராக ஆதாரமற்ற வதந்திகள், தவறான அறிக்கைகள் மற்றும் பொய்யான செய்திகள் எழுதப்பட்ட போதிலும் நான் அமைதியாக இருந்தேன். ஆனால் நான் இனி அமைதியாக இருக்க மாட்டேன். நான் என்ன செய்கிறேன் என்பது எல்லாம் கடவுளுக்கு தெரியும். அந்த செய்திகளை அப்படியே கடந்து செல்வதால் இது மீண்டும் மீண்டும் நடக்கிறது. அவர்கள் இதுபோன்ற வதந்திகள் பரப்புவதை நிறுத்துவதே இல்லை.
குறிப்பாக எனது படம் வெளியாகும் போதும், அறிவிக்கப்படும் போதும், எனது சினிமா வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் தருணங்களிலும் இதுபோன்ற வதந்திகள் தவிர்க்க முடியாதவை ஆகிறது. இனிமேல், இதுபோன்ற மோசமான செய்திகள் எந்த பிரபல ஊடகங்களிடமிருந்தோ அல்லது நபர்களிடமிருந்தோ வந்தால் நான் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்" என்று சாய் பல்லவி எச்சரித்தார்.
உண்மையில், சாய் பல்லவி எப்போதும் சைவ உணவுகளை மட்டுமே உண்பவர். இதை அவர் கடந்த காலங்களிலும் பலமுறை தெரியப்படுத்தி இருக்கிறார். ஓர் உயிர் இறப்பதை தன்னால் பார்க்க முடியாது என்பதால் சைவ உணவுகளை உண்பதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.