சம்பள பாக்கி விவகாரம்.. விஜய் பட நடன இயக்குநர் மீது புகார்..

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தில் இடம்பெற்றுள்ள ”நான் ரெடி தான்” பாடலுக்கு நடன இயக்குனராக இருந்த தினேஷ் மீது நடனக் கலைஞர்கள் சம்பள மோசடி குற்றசாட்டை முன் வைத்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் 'மனதை திருடிவிட்டாய்' படம் மூலம் நடனக் கலைஞராக தினேஷ் குமார் அறிமுகமானார். அதை தொடர்ந்து ஷாஜஹான், தமிழன்,ஏப்ரல் மாதத்தில், பகவதி, ரமணா உள்ளிட்ட பல படங்களில் நடனமாடி உள்ளார். ஆடுகளம் படத்தின் “ஒத்த சொல்லால” பாடலுக்காக சிறந்த நடன இயக்குனருக்கான தேசிய விருதைப் பெற்று பிரபலமானார். அதை தொடர்ந்து அயன், மாஸ்டர், போக்கிரி, ஈசன், இறுதிச்சுற்று போன்ற பல படங்களில் விருதுகளை வாங்கி குவித்தார்.அதை தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடன இயக்குனராக கமிட்டாகி படு பிஸியாக இருக்கும் தினேஷ் மீது தற்போது குற்றசாட்டு எழுந்துள்ளது.
நடிகர் விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தில் இடப்பெற்ற ”நான் ரெடி தான் வரவா” பாடலுக்கு நடன இயக்குனர் தினேஷ் கொரியோகிராஃபியில் 500க்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்கள் ஆடியிருந்தனர். இந்நிலையில் நடனக் கலைஞர்களுக்கான சம்பளத்தை கொடுக்கவில்லை என குற்றசாட்டு எழுந்துள்ளது. மேலும் அதை பற்றி புகார் அளித்த கௌரிசன் என்பவர் மீது தினேஷ் மற்றும் சிலர் தாக்கியது சிசிடிவியில் பதிவான நிலையில், அந்தக் காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.