நடிகை மீனாவிற்கு ஆதரவாக குரல் கொடுத்த சுப்ரீம் ஸ்டார் சரத்குமார்.. !
தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக கருதப்படுபவர் நடிகர் சரத்குமார். செம பிஸியான நடிகராக பல படங்களில் நடித்து வருகிறார். விஜய்யின் தந்தையாக வாரிசு படத்தில் நடித்த சரத்குமார், அசோக் செல்வன் உடன் இணைந்து நடித்த போர் தொழில் திரைப்படம் வரிசையாக அவருக்கு பல படங்களில் போலீஸ் யூனிஃபார்ம் மாட்டிவிட்டு அழகு பார்த்து வருகின்றன.
நாளை வெளியாக காத்திருக்கும் மழை பிடிக்காத மனிதன் படத்தில் சிறப்பு கேமியோ ரோலில் சரத்குமார் நடித்துள்ளார். இந்நிலையில், அந்த படத்தை புரமோட் செய்யும் விதமாக மீடியாக்களுக்கு பேட்டியளித்துள்ளார். அந்த வகையில், யூடியூப் சேனல்களில் சினிமா பிரபலங்கள் பற்றி தரக்குறைவாக பேசுபவர்கள் குறித்த கேள்விக்கு அதெல்லாம் ரொம்பவே தவறான விஷயம் என பொங்கி விட்டார். யூடியூப் சேனல்களில் சினிமா பிரபலங்கள் பற்றி எதுவுமே தெரியாமல் அருகில் இருந்து பார்த்தவர்களை போல படுமோசமாக பேசும் நபர்கள் புழுக்களுக்கு சமமானவர்கள் எனக் கூறியிருந்தார். இந்நிலையில், யூடியூப் சேனல்களில் பயில்வான் ரங்கநாதன் உள்ளிட்டோர் பிரபலங்களின் அந்தரங்க வாழ்க்கை பற்றி பேசி வரும் நிலையில், சரத்குமாரும் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
மேலும், நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி சரத்குமார் 2ம் தாரமாக திருமணம் செய்துக் கொண்டார் என்றும் வரலட்சுமி சரத்குமாரின் கணவர் நிக்கோலாய் சச்தேவுக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆகிவிட்டது என்றும் ஏகப்பட்ட விமர்சனங்கள் கிளம்பிய நிலையில், திருமண உறவில் ஏன் விரிசல் வருகிறது. யாருக்கு யாருடன் ரிலேஷன்ஷிப் ஒத்துப் போகிறது. அதற்கான உண்மையான காரணம் உள்ளிட்டவை சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டுமே தெரியும். தேவையில்லாமல், அதற்கு கமெண்ட் செய்வது, மோசமாக பேசுவது எல்லாம் தவறான செயல் என சரத்குமார் கூறியுள்ளார்.
நாட்டாமை உள்ளிட்ட சில படங்களில் சரத்குமாருடன் மீனா இணைந்து நடித்துள்ளார். நடிகை மீனா குறித்து சமீபத்தில் சோஷியல் மீடியாவில் படுமோசமாக கிளம்பிய வதந்திக்கு எதிராக அவரே கண்டனம் தெரிவிக்கும் விதமாக ட்வீட் போட்டிருந்தார். இந்நிலையில், பேட்டியின் போது பேசிய சரத்குமார், நடிகை மீனா பற்றி எப்படி தப்பா பேசலாம் எனக் கேட்டிருந்தார். பேசுபவர்களிடம் ஏதாவது ஒரு ப்ரூஃப் இருக்குமா? இஷ்டத்துக்கு வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசுவது ரொம்பவே தப்பு. அரசு நினைத்தால் இவர்களை எல்லாம் ஓவர் நைட்டில் கட்டுப்படுத்தலாம் என தனது ஆதங்கத்தை கொட்டித் தீர்த்துள்ளார் சரத்குமார்.