சீரியல் நடிகர் பிரபாகரன் மாரடைப்பால் மரணம்...!

‘கயல்’ உள்ளிட்ட டிவி சீரியல்களில் நடித்து வந்த நடிகர் பிரபாகரன் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 62.
சென்னை முகலிவாக்கத்தில் வசிந்து வந்தவர் சீரியல் நடிகர் பிரபாகரன். இவர் 'பனி விழும் மலர் வனம்', 'கயல்' 'கெட்டி மேளம்' உள்ளிட்ட தொடர்களில் நடித்து வந்தவர். கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக சின்னத்திரையில் நடித்து வருகிறார். ராடானின் 'வாணி ராணி' உள்ளிட்ட பல தொடர்களில் நடித்து வந்தார்.சன், விஜய், ஜீ தமிழ் என அத்தனை முன்னணி சேனல்களில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் நடித்தார். பெரும்பாலும் அப்பா கேரக்டர்களில் நடித்து வந்தார். கடந்த ஏப்ரல் 10ம் தேதி சீரியல் ஷூட்டிங்கை இரவு முடித்துவிட்டு, வீட்டுக்கு வந்ததும் சாப்பிட்டுவிட்டு தூங்க சென்றுள்ளார்.
ஆனால், சிறிது நேரத்திலேயே அவருக்கு நெஞ்சு வலி வந்துள்ளது. குடும்பத்தினர் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் உயிர் பிரிந்ததை உறுதி செய்துள்ளனர். 62 வயதான பிரபாகரனுக்கு மனைவியும், மகளும் உள்ளனர். மகள் 10வது படித்து வருகிறார். இவரது மரணம் சின்னத்திரை உலகில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.