சின்னத்திரை ஜோடி ஸ்ரித்திகா - ஆர்யனுக்கு பெண் குழந்தை...

சின்ன திரை நட்சத்திர தம்பதியான ஸ்ரித்திகா - ஆர்யனுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
'நாதஸ்வரம்' தொடரில் மலராக நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகை ஸ்ரித்திகா. இவர் 'குலதெய்வம்', 'என் இனிய தோழி', 'கல்யாணமாம் கல்யாணம்', 'கல்யாணப் பரிசு', 'மகராசி' தொடர்களில் நடித்துள்ளார். சின்ன திரையில் இவர் நடித்த தொடர்கள் எல்லாமே வெற்றி பெற்ற நிலையில், மகேஷ் சரண்யா மற்றும் பலர் என்ற திரைப்படத்தின் மூலம் வெள்ளித் திரையில் அறிமுகமானார். தொடர்ந்து வேங்கை, வெண்ணிலா கபடிக்குழு உள்ளிட்ட வெற்றிப் படங்களில் நடித்தார்.
இதனிடையே, மகராசி தொடரில் நடிக்கும்போது இத்தொடரின் நாயகன் எஸ்.எஸ்.ஆர். ஆர்யனுடனான நட்பு காதலாக மாறிய நிலையில் ஸ்ரித்திகா - ஆர்யன் இருவருக்கும் கடந்தாண்டு ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றது. ஸ்ரித்திகா - ஆர்யன் தம்பதி தாங்கள் கருவுற்று இருப்பதாக முன்னதாக அறிவித்திருந்த நிலையில், சில நாள்களுக்கு முன்பு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிலையில், ஸ்ரித்திகா - ஆர்யன் தம்பதிக்கு கடந்த ஏப். 28 ஆம் தேதி பெண் குழந்தை பிறந்துள்ளது. இதை இவர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளனர்.
இவர்களுக்கு ரசிகர்கள், சின்ன திரை, வெள்ளித் திரை பிரபலங்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். தற்போது, நடிகர் ஆர்யன் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் லட்சுமி என்ற தொடரில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.