பிரபல பாடகி கல்பனா தற்கொலை முயற்சி

பிரபல பின்னணி பாடகி கல்பனா தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மறைந்த நடிகரும் பாடகருமான டி.எஸ்.ராகவேந்திராவின் மகள் கல்பனா
தமிழில் பிரபல பாடகியாக உள்ளார். தமிழில் தாஜ்மகால் படத்தில் இடம்பெற்ற ‘திருப்பாச்சி அருவாளை’, பிரியமான தோழி படத்தில் இடம்பெற்ற ‘பெண்ணே நீயும் பெண்ணா’, மழை படத்தில் இடம்பெற்ற ‘நீ வரும்போது’ உள்ளிட்ட பிரபலமான பாடல்களை பாடியுள்ளார். இவர் ஹைதராபாத்தின் நிஜாம்பேட்டையில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களாக கல்பனாவின் வீட்டுக் கதவு திறக்கப்படாமல் இருப்பதை கண்ட காவலாளி, இது குறித்து குடியிருப்பில் வசிப்பவர்களிடம் கூறியுள்ளார்.
கல்பனாவின் தொலைபேசி எண்ணும் அணைத்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து குடியிருப்புவாசிகள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். விரைந்து வந்த போலீஸார் கல்பனாவின் வீட்டுக் கதவை உடைத்து திறந்து பார்த்தபோது அங்கு கல்பனா மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். அவரை உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் போலீஸார் அனுமதித்தனர். தற்போது அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.கல்பனாவின் தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.