இளையராஜா இசையில் பாடிய பாடகி நித்யஸ்ரீ...

சூப்பர் சிங்கர் மூலம் பிரபலமான பாடகி நித்யஸ்ரீ இளையராஜா இசையில் பாடியுள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
சூப்பர் சிங்கர் ஜுனியர், இந்தியன் ஐடல் ஜுனியர் ஆகிய டிவி இசைப் போட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரபலமானவர் நித்யஸ்ரீ வெங்கடரமணன். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பாடி வருகிறார். எந்த ஒரு பாடகர், பாடகிக்கும் இளையராஜா இசையில் பாட வேண்டும் என்பது பெரும் கனவாக இருக்கும். அப்படி ஒரு கனவு நித்யஸ்ரீக்கு நடந்து முடிந்துள்ளது.
இளையராஜா இசையில் உருவாகி வரும் மே 30ம் தேதி வெளியாக உள்ள 'சஷ்டிபூர்த்தி' தெலுங்குப் படத்தில் பாடியுள்ளார். 'ராத்ரன்த ரச்சே' என்ற அந்தப் பாடலில் இளையராஜாவின் மகன் யுவன் ஷங்கர் ராஜாவுடன் இணைந்து பாடியுள்ளார். சில தினங்களுக்கு முன்பு வெளியான இப்பாடல் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது.இளையராஜா இசையில் முதன் முதலில் பாடியது குறித்து, “ஒன் அன்ட் ஒன்லி மேஸ்ட்ரோ இளையராஜா சார் இசையில் எனது முதல் பாடல் 'சஷ்டிபூர்த்தி' படத்தில் ராத்ரன்த ரச்சே' பாடியுள்ளேன் என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். வாசுதேவ் அவர்களுக்கும் 'சஷ்டிபூர்த்தி' படக்குழுவினருக்கும் எனது சிறப்பு நன்றி. காலத்தால் அழியாத சாதனையாளரின் பாடகி என எனது பெயரும் ஸ்க்ரோலிங் டைட்டிலில் செல்வதைப் பார்ப்பது எனது கனவு நனவான தருணம்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.