ஏஆர் முருகதாஸுடன் கூட்டணி அமைப்பதை உறுதி செய்த சிவகார்த்திகேயன்... சூசக தகவலால் ரசிகர்கள் குஷி !
![sivakarthikeyan](https://ttncinema.com/static/c1e/client/88252/uploaded/5c04e6ee341b2adb69928859676ad8a0.jpg)
இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் புதிய படத்தில் நடிப்பதை நடிகர் சிவகார்த்திகேயன் உறுதி செய்துள்ளார்.
ஏ.ஆர்.முருகதாஸின் பிரொக்ஷன் நிறுவனம் சார்பில் கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஆகஸ்ட் 16 1947 ’. வரும் ஏப்ரல் 7-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள இப்படத்தை முருகதாஸிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய என்.எஸ்.பொன்குமார் எழுதி இயக்கியுள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றது.
இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி சென்னையில் சத்யம் திரையரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிவகார்த்திகேயன் கலந்துக்கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்த நிகழ்ச்சிக்கு வர முக்கியமான காரணம் ஏஆர் முருகதாஸ் சார்தான். அவருடைய படங்களுக்கு மிகப்பெரிய ரசிகன் நான். இந்த நிகழ்ச்சி எனக்கு ரொம்ப ரொம்ப ஸ்பெஷல். இந்த நிகழ்ச்சியின் மூலம் ஒரு பயணத்தையே பார்க்க முடிகிறது. ஏனென்றால் ‘ஏழாம் அறிவு’ படம் வெளியாகும் போது நடிகர் ஜெய் தான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அது வேற சேனல்ல ஒளிப்பரப்பானாலும், அந்த நிகழ்ச்சிக்கு நான் தான் ஸ்கிரிப்ட் ரெடி பண்ணேன்.
அதன்பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் பிரொக்ஷன் தயாரிப்பில் வெளியான ‘எங்கேயும், எப்போதும்’ படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நான் தான் இதே இடத்தில் தொகுத்து வழங்கினேன். அதன்பிறகு அவருடையே தயாரிப்பில் வெளியான ‘மான் கராத்தே’ படத்தில் ஹீரோவாக நடித்தேன். இப்போது முருகதாஸ் சார் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘ஆகஸ்ட் 16 1947’ படத்தின் நிகழ்ச்சிக்கு கெஸ்டாக வந்துள்ளேன் என்பது எனக்கு ஸ்பெஷலான பீல். இதையடுத்து ஒரு முக்கிய விஷயம் இருக்கு அது விரைவில் நடக்கும் என்று கூறினார். அதாவது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிப்பதை இதன் மூலம் சிவகார்த்திகேயன் உறுதி செய்துள்ளார்.