வழக்கு தொடர்வேன்!....- தொடங்கிய ‘LIC’ படப்பிடிப்பு, பின்தொடர்ந்த சர்ச்சை…

photo

இயக்குநர் விக்னேஷ் சிவன்- பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் தயாராகும் படத்தின் படப்பிடிப்பு நேற்று துவங்கிய நிலையில் இன்று டைட்டில் குறித்த சர்ச்சை எழுந்துள்ளது.

photo

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி, எஸ்ஜே சூர்யா ஆகியோர் இணைந்துள்ளனர். படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். படத்தின் பெயர் ‘LIC’ அதாவது Love Insurance Corporation என பெயரிட்டுள்ளனர். இதில் தான் சிக்கல் துவங்கியுள்ளது. அதாவது பூ, களவாணி, போன்ற படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளரும், இயக்குநருமான எஸ். எஸ் குமரன், 2015ஆம் ஆண்டு தான்  இந்த தலைப்பை பதிவு செய்துள்ளதாகவும், விக்னேஷ் சிவன் சட்டத்திற்கு புறம்பாக தனது தலைப்பை பயன்படுத்தியதாகவும் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில் அவர் கூறியதாவது “மதிப்பிற்குறிய பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கு வணக்கம். திரு விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய படத்திற்கு L I C என்று பெயரிட்டு இருப்பதைக்கண்டு அதிர்ச்சியும் மன உளைச்சலும் அடைந்தேன். காரணம் LIC என்கிற பெயரை 2015 ம் ஆண்டே என் தயாரிப்பு நிறுவனமான suma pictures இன் வாயிலாக பதிவு செய்து வைத்திருக்கிறேன்.

photo

இதை அறிந்த திரு விக்னேஷ் சிவன் தன்னுடைய புதிய படத்திற்கு அந்தபெயரை தரக்கோரி தனது மேலாளர் திரு மயில்வாகனன் மூலம் என்னை அணுகினார். ஆனால் LIC என்கிற தலைப்பு நான் இயக்கும் படத்திற்கு மிகச்சரியாக பொருந்துவதாலும், கதையின் பலமே அந்த தலைப்பை ஒட்டி அமைந்திருப்பதாலும் நான் மறுத்துவிட்டேன். ஆக இந்த தலைப்பை நான் முறைப்படி பதிவு செய்து வைத்திருக்கிறேன் என்பதை திரு விக்னேஷ் சிவன் நன்றாக அறிவார். அப்படி இருந்தும் இந்த தலைப்பை அவர் தனது படத்திற்கு வைக்கிறார் என்று சொன்னால் அது சட்டத்திற்கு புறம்பானது மட்டுமல்ல எளிய, சிறிய தயாரிப்பாளர்களை நசுக்கும் செயலாகும்.

இச்செயல் முழுக்க முழுக்க அதிகாரதன்மை கொண்டது. அவரின் இந்த செயலுக்கு நியாயம் கேட்டு ஊடகத்திற்கு முன் நிற்கிறேன். LIC என்கிற தலைப்பு என்னிடம் மட்டுமே இருப்பதால்  அதை திரு விக்னேஷ் சிவன் தன் படத்தில் எந்த விதத்திலும் பயன்படுத்தக்கூடாது  என்று இதன் மூலம் தெரியப்படுத்த விரும்புகிறேன். இனியும் இச்செயலை திரு விக்னேஷ் சிவன் தொடர்வார் என்றால் சட்டப்படி அவர் மீது நடவடிக்கை எடுப்பேன் என்பதையும் இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்” என கூறியுள்ளார்.

Share this story