STR49 படத்தின் அசத்தல் அப்டேட்... சிம்புவுடன் இணைந்த சந்தானம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு...!

str49

சிம்புவின் 49-வது படத்தில் சந்தானம் நடிக்க உள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 


நீண்ட நாட்களுக்குப் பிறகு இருவரும் இணைந்து நடிப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
சிம்பு நடிப்பில் கடைசியாக 2023-ம் ஆண்டு வெளியானது ‘பத்து தல’. 2 ஆண்டுகளாக அவர் நடிப்பில் படங்கள் வெளியாகவில்லை. அடுத்து அவர் மணிரத்னம் - கமல் காம்போவில் உருவாகும் ‘தக் லைஃப்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் ஜுன் மாதம் திரைக்கு வருகிறது. அடுத்து சிம்புவின் 49-வது படத்தை ‘பார்க்கிங்’ பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குகிறார்.


டான் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. இதில் நடிகர் சந்தானம் இணைந்துள்ளதாகச் செய்திகள் வெளியாகின. சிம்புவின் ‘மன்மதன்’ படம் மூலம் நடிகராக அறிமுகமான சந்தானம் அவருடன் வல்லவன், சிலம்பாட்டம், வானம், வாலு என சில படங்களில் இணைந்து நடித்துள்ளார்.இப்போது ஹீரோவாக மட்டுமே நடித்து வரும் சந்தானம், ‘எஸ்டிஆர்49’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். முன்னதாக இந்தப் படத்தில் நடிகை கயாடு லோஹர் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. தற்போது சந்தானம் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. முன்னதாக சந்தானம் அளித்த பேட்டி ஒன்றில், “ஒருநாள் சிம்புவிடமிருந்து அழைப்பு வந்தது. என் படத்தில் நடிக்கிறாயா? எனக் கேட்டார். அவர் கேட்டால் எப்போதும் ஆமாம் என்றுதான் சொல்லுவேன். எனது படத்தில் பிஸியாக இருந்தாலும் சிம்பு கேட்டதால் உடனே சரி என்றேன். எஸ்டிஆர் 49 படத்தில் எங்களது அதிரடியைப் பார்க்கலாம்” என தெரிவித்துள்ளார்.


 

Share this story