உண்மைத் தன்மையை நான் சோதித்திருக்க வேண்டும்.. மனம் வருந்தி மன்னிப்பு கேட்ட சுதா கொங்கரா!
துரோகி படம் மூலம் தமிழில் இயக்குநராக அறிமுகமான சுதா கொங்கரா, இறுதிச்சுற்று, சூரரைப் போற்று உள்ளிட்ட வெற்றிப் படங்களைக் கொடுத்து முன்னணி இயக்குநராக வலம் வருகிறார். கோபிநாத்தின் வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட சூரரைப் போற்று படம் 68வது தேசிய விருது விழாவில் 5 தேசிய விருதுகளை வாங்கியது.சூரரைப் போற்று படத்தை தொடர்ந்து, இவர்கள் இருவரும் புறநானூறு படத்தில் இணைந்தனர். ஆனால், அந்தப்படம் பாதியிலேயே கைவிடப்பட்டது. அந்த படம் குறித்து யூடியூப் சேனல் ஒன்றில் பேசிய சுதா கொங்குரா, சாவர்க்கர் பற்றி பேசியிருந்தார். அது சோஷியல் மீடியாவில் சர்ச்சையான நிலையில் அது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.இயக்குநர் சுதா கொங்குரா அளித்த பேட்டியில், நான் அடிப்படையிலேயே வரலாறு மாணவி. நான் வுமன் ஸ்டடிஸ் படிப்பு படித்துக்கொண்டு இருக்கும் போது, எனக்கு பாடம் எடுத்த ஆசிரியர் ஒருவர், சாவர்க்கர் கதையை சொன்னார். சாவர்க்கர் ஒரு பெரிய தலைவர். அனைவராலும் மதிக்கப்படுபவர். கல்யாணம் பண்ணிட்டு, அவரது மனைவியை படிக்கச் சொல்லி கட்டாயப்படுத்துகிறார். அந்த பெண்ணிற்கு வீட்டில் இருப்பதற்குத் தான் பிடித்து இருந்தது. ஏனென்றால் அந்த காலத்தில் பெண்கள் பள்ளிக்கு செல்ல மாட்டார்கள். அவங்க படிக்க போகும் போது, அந்த தெருவில் உள்ளவர்கள் அவர்களை கேலி செய்ததால்,. அந்த அம்மா அழுது கொண்டு, பள்ளிக்கு போகமாட்டேன் என சொல்வார்கள். அப்போது சாவர்க்கர் அந்த பெண்ணின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு படிக்க வைக்கச் சென்றார். இது சரியா தப்பா. அங்கிருந்து என்னுடைய கேள்விகள் எழுந்தது என்று பேசி இருந்தார்.இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து, சுதா கொங்கராவிற்கு எதிராக பல கருத்துக்கள் இணையத்தில் டிரெண்டானது.
இதையடுத்து இதற்கு தனது எக்ஸ் தள பக்கத்தில் விளக்கம் அளித்த சுதா கொங்கரா, என் தவறுக்கு வருந்துகிறேன். எனது பதினேழாவது வயதில் பெண் கல்வி குறித்த எனது வகுப்பு ஒன்றில் எனது ஆசிரியர் சொன்னதை வைத்து நான் அந்த நேர்முகத்தில் பேசியிருந்தேன். ஒரு வரலாற்று மாணவியாக அதன் உண்மைத் தன்மையை நான் சோதித்திருக்க வேண்டும். அது என் பக்கத்தில் தவறுதான்.எதிர்காலத்தில் அப்படி நேராது என்று உறுதியளிக்கிறேன். மற்றபடி ஒருவருடைய உன்னதமான செயலுக்கான புகழை இன்னொருவருக்குத் தர வேண்டும் என்ற நோக்கம் எனக்கு இல்லை. எனது பேச்சில் இருந்த தகவல் பிழையை சுட்டிக் காட்டியவர்களுக்கு நன்றி. ஜோதிபா மற்றும் சாவித்திரிபாய் புலே ஆகியோருக்கு என்றும் தலை வணங்குகிறேன் என பதிவிட்டுள்ளார்.